2015-02-07 15:51:00

ஆயர்கள் இளையோர் உருவாக்கத்தில் கவனம் செலுத்த வேண்டும்


பிப்.07,2015. உலகாயுதப் போக்கு, அரசியல் ஆர்வம் போன்றவற்றை விலக்கி, திருப்பீடத் தூதர்கள் வழியாக, பேதுருவின் வழிவருபவர்களுடன் உடன்பிறப்பு ஒன்றிப்பைத் தொடர்ந்து வலுவடையச் செய்யுமாறு ஆப்ரிக்க ஆயர்களிடம் கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

SECAM எனப்படும் ஆப்ரிக்கா மற்றும் மடகாஸ்கர் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை இச்சனிக்கிழமையன்று வத்திக்கானில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆப்ரிக்காவின் வருங்காலம் இளையோரிடம் இருப்பதால், அவர்களின் உருவாக்கத்தில் கவனம் செலுத்துமாறும் வலியுறுத்தினார்.

 

ஆயர்களின் சான்றுபகரும் வாழ்வு இளையோருக்கு அதிகம் தேவைப்படுகின்றது என்றும், வெற்றி, செல்வம், அதிகாரவெறி போன்றவற்றை அடைவதற்கு எந்த வழியையும் பின்பற்ற முயலும் புதிய காலனி ஆதிக்கமுறைகளிலிருந்து இளையோர் பாதுகாக்கப்படுவது முக்கியம் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

குடும்பங்கள் பிளவுபடுவதை ஆப்ரிக்காவிலும் காண முடிகின்றது என்றும் கூறிய திருத்தந்தை, குடும்ப வாழ்வை உறுதிப்படுத்தும் ஒவ்வொரு முயற்சியையும் ஆயர்கள் மதிப்பீடு செய்து ஊக்கப்படுத்துமாறும் கூறினார்.

நற்செய்தி அறிவித்தல் என்பது அக வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும் என்றும், மனமாற்றத்தின் பயனாக திருஅவை சமூகம் முழுவதும் உயிருள்ள விசுவாசம் மற்றும் பிறரன்புக்குச் சான்றாய்த் திகழும் என்றும் ஆப்ரிக்க ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.