2015-02-04 16:02:00

திருத்தந்தை -Tacloban மக்களை நான் என்றென்றும் மறக்கமாட்டேன்


பிப்.04,2015 உங்களை நான் என்றென்றும் மறக்கமாட்டேன், மறக்காமல் இருப்பதற்கு இறைவன் எனக்குத் துணைசெய்வாராக என்ற வார்த்தைகள் அடங்கிய ஒரு மடலை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் பிலிப்பின்ஸ் நாட்டின் பாலோ உயர்மறைமாவட்டத்திற்கு அனுப்பியுள்ளார்.

சனவரி 15 முதல் 19 முடிய, தான் பிலிப்பின்ஸ் நாட்டில் மேற்கொண்ட பயணத்தின் சிகர நிகழ்வாக, ஹையான் சூறாவளியில் சிக்கிய மக்களோடு திருப்பலி ஆற்றிய நிகழ்வு அமைந்ததென்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் கூறியுள்ளார்.

சனவரி 17ம் தேதி, 'Papete' என்ற மற்றொரு புயல் வீசிக்கொண்டிருந்த காரணத்தால், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் Tacloban பகுதியில் மேற்கொண்ட பயணமும், திருப்பலியும் விரைவில் முடிக்கப்படவேண்டிய நிலைக்கு உள்ளானதற்கு தன் வருத்தத்தைத் தெரிவித்தத் திருத்தந்தை, அவ்வேளையில் தான் பொறுமையின்றி நடந்ததாக மக்கள் உணர்ந்தால், தன்னை மன்னிக்கவேண்டும் என்றும் இம்மடலில் கூறியுள்ளார்.

பாலோ பேராயரும், அப்பகுதி மக்களும் காட்டிய இறைபற்று தன் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம் என்று கூறியுள்ள திருத்தந்தையின் இம்மடலை, பேராயர் ஜான் டு அவர்கள் இத்திங்களன்று வெளியிட்டார்.

ஆதாரம் : Fides/Zenit/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.