2015-02-02 15:45:00

ஜூன் மாதம் சரயேவோவில் திருத்தந்தை


பிப்.02,2015. வரும் ஜூன் மாதம் 6ம் தேதி சனிக்கிழமையன்று, போஸ்னியா - ஹெர்ஸகொவினா நாட்டின் தலைநகர் சரயேவோவில் திருப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தன் மூவேளை செப உரையின் இறுதியில் அறிவித்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

போஸ்னியா போரின்போது பெருமளவில் பாதிக்கப்பட்ட இந்நகரில் தான் மேற்கொள்ளும் திருப்பயணம் வெற்றியடைய செபிக்குமாறு தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த மக்களை நோக்கி விண்ணப்பம் ஒன்றையும் விடுத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

சகோதரத்துவம், அமைதி, மதங்களிடையே நிலவும் பேச்சுவார்த்தைகள், நட்புறவு ஆகியவற்றிற்கு உதவும் நோக்கில் சரயேவோவுக்கு தான் மேற்கொள்ளும் திருப்பயணம் அமையவேண்டும் என செபிக்குமாறு கேட்டுக்கொண்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள், யூதர்கள் மற்றும் இஸ்லாமியர்களை கொண்டுள்ள போஸ்னியா - ஹெர்ஸகொவினா நாட்டில், கடைசியாக, திருத்தந்தை புனித இரண்டாம்  ஜான் பால் அவர்கள், 1997ம் ஆண்டு திருப்பயணம் மேற்கொண்டார்.

வரும் ஜூன் மாதம் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சரயேவோவில் மேற்கொள்ள உள்ள திருப்பயணம் அவரின் எட்டாவது வெளிநாட்டுத் திருப்பயணமாக இருக்கும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.