2015-01-30 15:51:00

Cuajimalpa விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்


சன.30,2015. மெக்சிகோ நகரின் Cuajimalpa தாய்-சேய் நல மருத்துவமனையில் சமையல் வாயு வெடித்ததில் பலியானவர்கள் மற்றும் காயமடைந்தோருக்குத் தனது செபத்தையும் ஒருமைப்பாட்டுணர்வையும் தெரிவித்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

இவ்வியாழனன்று இவ்விபத்து நடந்த தகவல் கிடைத்தவுடனே, இவ்விபத்தில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு இறைவன் சக்தியையும், அமைதியையும் தருமாறு செபிப்போம் என தனது டுவிட்டரில் பதிவு செய்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

Cuajimalpa மருத்துவமனையின் சமையலுக்குத் தேவையான சமையல் வாயுவை ஒரு வாகனத்திலிருந்து நிரப்பிக் கொண்டிருந்தபோது, வாயுவை செலுத்திய குழாயில் கசிவு ஏற்பட்டு பலத்த சப்தத்துடன் வெடித்தது. இதில் 3 பேர் உயிரிழந்தனர் மற்றும் பல குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்த வெடிப்பு பல மைல் தூரம் உணரப்பட்டதாக ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

மேலும், மெக்சிகோ பேராயர் கர்தினால் Norberto Rivera Carrera அவர்களுக்குத் திருத்தந்தையின் பெயரில் அனுதாபத் தந்திச் செய்தி அனுப்பியுள்ள திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இதில் பாதிக்கப்பட்டவர்களுடன் திருத்தந்தை கொண்டிருக்கும் தோழமையுணர்வையும், திருத்தந்தையின் செபத்தையும் தெரிவித்துள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.