2015-01-28 15:54:00

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமைதி அவசியம்


சன.28,2015. மத்திய கிழக்குப் பகுதியில் கிறிஸ்தவர்களின் துன்பநிலை அகற்றப்படவும், அராபியர்களும், அனைத்துலக சமுதாயமும் பயங்கரவாதத்துக்கு ஆதரவு தருவதை நிறுத்தவும், புலம்பெயர்ந்த மக்களுக்கு அவசரகால உதவிகள் செய்யப்பட்டு அவர்கள் தங்களின் சொந்த வீடுகளுக்குத் திரும்ப உதவவும் வேண்டுமென அப்பகுதியிலுள்ள கிறிஸ்தவத் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

லெபனானில் கூட்டத்தை நிறைவு செய்துள்ள மத்திய கிழக்குப் பகுதி கிறிஸ்தவ சபைகளின் முதுபெரும் தந்தையரும், தலைவர்களும் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வேண்டுகோளை உலகினருக்கு விடுத்துள்ளனர்.

இஸ்ரேல்-பாலஸ்தீன நெருக்கடிகளுக்குத் தீர்வு காண்பதும் தேவைப்படுகின்றது என்று கூறியுள்ள அத்தலைவர்கள், போர் மற்றும் இன்னல்கள் மத்தியில் தங்களின் நாடுகளிலே தங்குவதற்குத் தீர்மானித்துள்ள மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும், குடியிருப்பு வசதிகளும் வழங்க வேண்டியது இன்றியமையாதது என்றும் கூறினர். 

பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அமைதியை ஏற்படுத்துவது அவசியம் எனவும் அவ்வறிக்கை வலியுறுத்துகிறது.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.