சன.13,2015. இலங்கை நாட்டினரின் வாழ்வுக்கு முழுமையான நான்கு பெரிய சமயக் குழுக்களாக அமைந்துள்ள புத்தம், இந்து, இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மதத்தவர் உட்பட பலரை ஒன்றுகூட்டியுள்ள இக்கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு வாய்ப்பு கிடைத்ததற்காக நன்றி கூறுகிறேன். கத்தோலிக்கத் திருஅவை இலங்கை மீது வைத்திருக்கும் மிகுந்த அன்பையும் அக்கறையையும் வெளிப்படுத்த, எனது முன்னோர்களாகிய திருத்தந்தையர் ஆறாம் பவுல், 2ம் ஜான் பால் ஆகியோரின் அடிச்சுவடுகளில் நானும் இலங்கைக்கு வந்துள்ளேன். இங்குள்ள கத்தோலிக்கச் சமூகத்தைச் சந்தித்து, அவர்களைக் கிறிஸ்தவ விசுவாசத்தில் உறுதிப்படுத்தி, அவர்களோடு செபித்து, அவர்களின் இன்ப துன்பங்களைப் பகிர்ந்து கொள்ள இங்கு நான் வந்திருப்பது சிறப்பான வரமாக உள்ளது. அதேபோல், ஞானம், உண்மை மற்றும் தூய்மையான வாழ்வுக்கான ஆவலை எம்மோடு பகிர்ந்துகொள்ளும் பெரிய சமய மரபுகளைக் கொண்ட மக்களுடன் இருப்பதும் இதற்குச் சமமான அருளாகவே உள்ளது. கத்தோலிக்கத் திருஅவை, பிற மதங்கள்மீது கொண்டிருக்கும் தனது ஆழ்ந்த மற்றும் மிகுந்த மதிப்பு, இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தில் அறிவிக்கப்பட்டது. இம்மதங்களிலுள்ள உண்மை மற்றும் புனிதத்தை திருஅவை புறக்கணிப்பதில்லை என்றும் அச்சங்கம் கூறுகிறது. இந்த உணர்வில், கத்தோலிக்கத் திருஅவை உங்களோடும், நன்மனம் கொண்ட அனைவரோடும், அனைத்து இலங்கை மக்களின் நல்வாழ்வைத்தேடும் அனைவரோடும் ஒத்துழைக்க ஆவல் கொள்கிறது. அண்மை ஆண்டுகளில் மதங்கள் மற்றும் கிறிஸ்தவ சபைகளிடையே இடம்பெற்றுள்ள பல வகையான ஒத்துழைப்பு, எனது இந்தப் பயணம் ஊக்குவிக்கப்பட்டு ஆழப்படுத்தப்பட உதவும் என நம்புகிறேன்.
பாராட்டுக்குரிய இந்த முயற்சிகள், உரையாடலுக்கு வாய்ப்புக்களை வழங்கும். நாம் ஒருவர் ஒருவரை அறியவும், புரிந்துகொள்ளவும், மதிக்கவும் இது முக்கியமானது. ஆயினும், இத்தகைய உரையாலும் சந்திப்பும் சாரமுள்ளதாக இருக்க வேண்டுமெனில், நமது உறுதிப்பாடுகளை வெளிப்படுத்தவதில் அடித்தளம் அமைக்கப்பட வேண்டும். நிச்சயமாக, இத்தகைய உரையாடல், நம் விசுவாசமும், மரபுகளும், நடைமுறைகளும் எவ்வளவு வித்தியாசப்படுகின்றன என்பதைக் குறித்துக்காட்டும். நம் உறுதிப்பாடுகளை வெளிப்படுத்துவதில் நாம் நேர்மையாக இருந்தால் நாம் பொதுவாக எதைப் பற்றியிருக்கிறோமோ அதை நம்மால் பார்க்க இயலும். ஒருவர் ஒருவரை மதிப்பதற்கும், ஒத்துழைப்புக்கும் உண்மையான நட்புக்கும் புதிய கதவுகளைத் திறக்கும்.
இத்தகைய நல்ல வளர்ச்சிகள், பல சமயங்களிலும், கிறிஸ்தவ சபைகளிலும் காணப்படும் உறவுகளிலும் இலங்கையில் சிறப்பான முக்கியத்துவம் பெறும். ஏனெனில் பல ஆண்டுகளாக இந்நாட்டினர் உள்நாட்டுப் போருக்கும் வன்முறைக்கும் பலியாகியுள்ளனர். மேலும் சண்டையும் பிரிவினையும் அல்ல, ஆனால் இப்போது தேவைப்படுவது குணப்படுத்தலும் ஒற்றுமையுமே. குணப்படுத்தலையும், ஒற்றுமையையும் பேணி வளர்க்கும் சிறந்த பணி, நாட்டின் நன்மையை விரும்பும் அனைவர்மீதும் சுமத்தப்பட்டுள்ள பணியாகும். உண்மையில் இப்பணி முழு மனிதக் குடும்பத்திற்கும் தேவையானது. எந்த இனம் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும், மனிதர் தங்கள் சகோதர சகோதரிகளுடன் நல்லிணக்கத்தில் வாழ்வதற்கு, ஆண்களும் பெண்களும் தங்களின் தனித்துவத்தை இழக்க வேண்டியதில்லை என்பதை, பல்சமய மற்றும் கிறிஸ்தவ சபைகளிடையே ஒத்துழைப்பு வெளிப்படுத்தும் என்பது எனது நம்பிக்கை.
இந்தச் சேவையை ஆற்றுவதற்கு பல்வேறு மதத்தவருக்கு எத்தனை வழிகள் இருக்கின்றன! உடன்பிறப்பு ஒருமைப்பாட்டுடன் குணப்படுத்தும் நல்மருந்து எத்தனை பேருக்குத் தேவைப்படுகின்றது! சிறப்பாக, ஆறுதல் மற்றும் நம்பிக்கை வார்த்தைக்காக ஏங்கும் ஏழைகள், கைவிடப்பட்டவர்கள் போன்றோருக்கு பொருளாதார மற்றும் ஆன்மீகத் தேவைகள் உள்ளன என நான் நினைக்கிறேன். தங்களின் அன்பு உறவுகளின் இழப்பால் தொடர்ந்து கண்ணீர் வடிக்கும் பல குடும்பங்களை இந்நேரத்தில் நினைக்கிறேன்.
எல்லாவற்றுக்கும் மேலாக, உங்கள் நாட்டு வரலாற்றின் இத்தருணத்தில், சமுதாயத்தின் நன்னெறி அடித்தளத்தை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு எத்தனை நன்மனங்கள் வழிகளைத் தேடுகின்றன? பல்வேறு மதத் தலைவர்களிடையே வளர்ந்துவரும் ஒத்துழைப்பு உணர்வு, அனைத்து இலங்கை மக்கள் மத்தியிலும் ஒப்புரவுக்கான அர்ப்பணத்தை வளர்ப்பதாக! அமைதியைக் காரணம் காட்டி, வன்முறை மற்றும் போரில் ஈடுபடுவதற்கு சமய நம்பிக்கைகள் ஒருபோதும் அனுமதிக்கப்படக் கூடாது. ஒவ்வொரு மதத்திலும் நிலவும் அமைதியும் ஒன்றிணைந்த வாழ்வும் முழுமையாக வாழப்படுவதற்கு நம் சமூகங்களை ஊக்குவிப்பதில் நாம் பாரபட்சமின்றி இருக்க வேண்டும். வன்முறைகள் இடம்பெறும்போது அவற்றைக் கண்டிப்பதற்கும் நாம் பாரபட்சமின்றி செயல்பட வேண்டும்.
அன்பு நண்பர்களே, உங்களது மனத்தாராளம் நிறைந்த வரவேற்புக்கு மீண்டும் எனது நன்றி. இந்த நமது உடன்பிறப்பு உணர்வுமிக்க சந்திப்பு அமைதியின் ஆசீர்களைப் பரப்புவதற்கும், நல்லிணக்கத்தில் வாழ்வதற்குமான நம் முயற்சிகளை உறுதி செய்வதாக!
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |