சன.12,2015. “இலங்கை மற்றும் பிலிப்பின்ஸ் நாடுகளுக்கு நான் பயணத்தைத் துவக்கும் நாளன்று, இந்நாடுகளில் உள்ள மக்களுக்காக என்னுடன் இணைந்து செபிக்குமாறு உங்களைக் கேட்கிறேன்” என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் டுவிட்டரில் இத்திங்களன்று எழுதியுள்ளார்.
இத்திங்கள் உரோம் நேரம் இரவு 7 மணிக்கு ஆல் இத்தாலியா A 320 விமானத்தில் இலங்கைத் தலைநகர் கொழும்புவுக்குப் புறப்படுகிறார் திருத்தந்தை பிரான்சிஸ்.
7630 கிலோ மீட்டர் தூரத்தை 9 மணி 40 நிமிடங்கள் பயணம் செய்து இச்செவ்வாய் காலை 9 மணிக்கு கொழும்பு சென்றடையும் திருத்தந்தை, கொழும்பு பண்டாரநாயக்க விமான நிலையத்தில் வரவேற்பில் பங்கெடுத்தல், புதிய அரசுத்தலைவர் சந்திப்பு, பல்சமயத் தலைவர்கள் சந்திப்பு, முத்திப்பேறுபெற்ற ஜோசப் வாஸ் அவர்களைப் புனிதராக அறிவித்தல், மடு அன்னை திருத்தலம் செல்லல் என பல முக்கிய நிகழ்வுகளை நிறைவேற்றுகிறார்.
வருகிற வியாழன் காலை இலங்கையிலிருந்து பிலிப்பீன்ஸ் சென்று அங்கு திருத்தூதுப் பயண நிகழ்வுகளை நிறைவுசெய்து இம்மாதம் 19ம் தேதி காலை 10 மணிக்கு மனிலாவிலிருந்து உரோம் புறப்படுவார் திருத்தந்தை பிரான்சிஸ்.
24 ஆயிரம் பேர் திருத்தந்தையின் பாதுகாப்புப் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
ஆதாரம் : வத்திக்கான் வானொலி
All the contents on this site are copyrighted ©. |