2015-01-12 17:04:00

33 குழந்தைகளுக்குத் திருத்தந்தை திருமுழுக்கு


சன.12,2015. இயேசுவின் திருமுழுக்கு விழாவாகிய இஞ்ஞாயிறு காலையில் வத்திக்கான் சிஸ்டீன் சிற்றாலயத்தில் 20 ஆண் மற்றும் 13 பெண் குழந்தைகள் என 33 குழந்தைகளுக்குத் திருமுழுக்கு வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருமுழுக்கு வழியாக நாம் திருஅவையின் அங்கங்களாகவும், கிறிஸ்தவர்களாகவும் மாறுகின்றோம் என்று கூறினார்.

திருஅவை என்ற உடலில், இம்மக்களின் பயணத்தில் விசுவாசம் ஒரு தலைமுறையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு வழங்கப்படுகிறது, இதுவே திருஅவையின் விசுவாசம், விசுவாச மெழுகுதிரியை ஒரு கையிலிருந்து அடுத்த கைக்குக் கொடுப்பது எத்துணை அழகு என்றும் கூறினார் திருத்தந்தை.

தாய்மார்க்காகச் செபிப்போம், தங்கள் குழந்தைகளுக்கு உணவு கொடுக்க இயலா நிலையில் நிறையத் தாய்மார் உள்ளனர் என்றும், இந்தத் தாய்மார்க்காகச் செபித்து அவர்களுக்கு உதவுவோம் என்றும் கூறிய திருத்தந்தை, இந்தக் குழந்தைகள் மூவொரு கடவுள் சூழலில் குடும்பங்களில் வாழ்வதற்குத் தூய ஆவியாரிடம் செபிப்பது முக்கியமானது என்றும் கூறினார்.

அன்புப் பெற்றோர்களே, ஞானப் பெற்றோர்களே, உங்கள் குழந்தைகள் நன்றாக வளர்வதற்கு நீங்கள் உதவி செய்ய விரும்பினால், அவர்கள் உண்மையான கிறிஸ்தவர்களாக மாற நீங்கள் விரும்பினால் அவர்களுக்கு இயேசுவின் நற்செய்தியாகிய கடவுளின் வார்த்தையைக் கொடுங்கள், அவர்கள் தூய ஆவியில் வளர உதவுங்கள் என்றும் கூறினார் திருத்தந்தை.

நல்ல தாய் தந்தை போன்று கடவுளும் தம் பிள்ளைகளுக்கு நல்ல பொருள்களைக் கொடுக்க விரும்புகிறார் என்றும் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

 ஆதாரம் :   வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.