2015-01-10 16:24:00

ஞாயிறு சிந்தனை


18 ஆண்டுகளுக்கு முன் சனவரி 1, புத்தாண்டு தினத்தன்று நடந்த ஒரு சம்பவம், என் மனதில் ஆழமான தாக்கங்களை உருவாக்கியது. நானும், மற்றொரு குருவும் புத்தாண்டு தினத்தன்று சென்னை அரசு மருத்துவமனைக்குச் சென்றோம். எங்கள் இயேசு சபையைச் சார்ந்த ஒரு குரு அன்று காலை சாலை விபத்தில் இறந்துவிட்டார். புத்தாண்டு விழாவுக்கான நள்ளிரவு, மற்றும் காலைத் திருப்பலிகளை முடித்துவிட்டு, தன் இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக்கொண்டிருந்த அவர் வேறொரு வாகன ஓட்டியின் தவறால் உயிரிழந்தார். அவரது உடலை அரசு மருத்துவமனையின் சவக்கிடங்கிலிருந்து மீட்டுவரச் சென்றிருந்தோம். அந்தச் சவக்கிடங்கில் நான் அடைந்த அதிர்ச்சியை என்னால் பல மாதங்கள் மறக்க முடியவில்லை. புத்தாண்டை வரவேற்கக் காத்திருக்கும் அந்த இரவில் நடக்கும் சாலை விபத்துக்களை நாம் அறிவோம். எனவே, அந்தச் சவக்கிடங்கில் பல உடல்கள், பலவாறாக சிதைக்கப்பட்ட நிலையில் இருந்தன. அதுவும், அச்சடலங்கள் ஒன்றன்மேல் ஒன்றாகத் தாறுமாறாகப் போடப்பட்டிருந்தன. அத்தனை சடலங்களின் மத்தியில் எங்கள் குருவை அங்கிருந்த காவல் துறையினரிடம் அடையாளம் காட்டினோம். நானும், என்னுடன் வந்த குருவும் அந்தச் சவக்கிடங்கில் செலவிட்ட நேரம் ஒருவேளை 10 நிமிடங்கள் என்று நினைக்கிறேன். ஆனால், அது பல மணி நேரங்கள் போல் தெரிந்தது.

அந்தச் சவக்கிடங்கில் ஆரம்பித்து பல நாட்கள், இரவும் பகலும் என்னுள் ஒலித்துக் கொண்டிருந்த ஒரு கேள்வி: வாழ்க்கை இவ்வளவுதானா? அந்த சவக்கிடங்கில், இறந்த உடல்களுக்கு மத்தியில் வாழ்வைப் பற்றிய ஏதோ ஒரு தெளிவு எனக்குக் கிடைத்ததை உணர்ந்தேன். அந்தப் புத்தாண்டு நாள் என் வாழ்வைப் பெருமளவு புரட்டிப்போட்டது என்றே சொல்லவேண்டும். மனித வரலாற்றில் எத்தனையோ பேருடைய வாழ்வைப் புரட்டிப்போட்ட சம்பவங்கள் உள்ளன.

கிறிஸ்தவர்களைக் கைது செய்து எருசலேமுக்குக் கொண்டுவர கொலை வெறியோடு தமஸ்கு நகர்நோக்கிச் சென்ற சவுலைப் பார்வை இழக்கச் செய்து, பின்னர் மறுபார்வை தந்த இறைவன், சவுலின் வாழ்வைப் புரட்டிப்போட்டார். பாம்பலோனா கோட்டையில், காலில் பட்ட குண்டு, இலயோலா இஞ்ஞாசியாரின் வாழ்வைப் புரட்டிப்போட்டது.

தென்னாப்பிரிக்காவில், புகைவண்டியிலிருந்து பலவந்தமாய் வெளியேற்றப்பட்ட இராஜ் மோகன் காந்தியின் அந்தப் பயணம், அவரது வாழ்வைப் புரட்டிப்போட்டது. அவரை மகாத்மாவாக்கியது. கொல்கத்தாவின் சாக்கடைகளும், சேரிகளும் அன்னை தெரசாவின் வாழ்வைப் புரட்டிபோட்டன. அதுவரை அவர்கள் வாழ்ந்த வாழ்வும், அந்த அனுபவத்திற்குப் பின் தொடர்ந்த வாழ்வும் வேறுபட்டு நின்றன. புதியதோர் வாழ்வில் அவர்கள் அடியெடுத்து வைத்ததைப் போன்ற உணர்வு அது. இக்கண்ணோட்டத்தில் பார்த்தால், இந்த அனுபவங்கள் எல்லாம் இவர்களுக்குக் கிடைத்த திருமுழுக்கு என்றே சொல்லவேண்டும். இறைமகன் இயேசுவின் வாழ்வைப் புரட்டிப்போட்ட அவரது திருமுழுக்கை நாம் இன்று சிந்திக்கலாம்.

முன்பு ஒரு முறை படித்த சிரிப்புத் துணுக்கு ஒன்று நினைவுக்கு வருகிறது. இரண்டு நண்பர்கள் பேசிக்கொள்கின்றனர். “நான் கடவுளைப் பார்த்தால், ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்” என்று ஒரு நண்பர் ஆரம்பிக்கிறார். “என்ன கேள்வி?” என்று அடுத்தவர் கேட்கிறார். “கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா?” என்பதே தன் கேள்வி என்று நண்பர் சொல்ல, “நல்ல கேள்வி. கேட்கவேண்டியது தானே?” என்று அடுத்தவர் சொல்கிறார். சிறிது நேரத் தயக்கத்துக்குப் பின், முதல் நண்பர், “அதே கேள்வியை கடவுள் என்கிட்டே திருப்பி கேட்டா?” என்று சொல்கிறார். சிரிப்புகள் பலநேரங்களில் சிந்தனைகளைப் பற்றவைக்கும் நெருப்புக் குச்சிகள்.  இல்லையா?

கடவுளே, இவ்வளவு அநியாயம் நடக்குறதைப் பாக்குறியே. ஒன்னும் செய்ய மாட்டியா? என்ற இந்தக் கேள்வியைப் பல கோடி மக்கள் இதுவரை கேட்டிருப்பர். இனியும் கேட்பார்கள். நானும் இந்தக் கேள்வியைக் கேட்க நினைத்ததுண்டு. கேட்டதில்லை. ஏன்? எனக்கும் இதே பயம். இந்தக் கேள்வியை விண்ணை நோக்கி நான் ஏவிவிட்டால், அது மீண்டும் ஒரு மின்னலாக, இடியாக, எதிரொலியாக என்னைத் தாக்குமோ என்ற பயம்.

மனித கண்ணோட்டத்தில் பார்த்தால், இயேசுவுக்கும் இந்தக் கேள்வி கட்டாயம் உள்ளத்தில் எழுந்திருக்கும். 30 ஆண்டுகள் அமைதியாக, நாசரேத்தூரில், தானுண்டு, தன் வேலையுண்டு, தன் தாயுண்டு என்று இயேசு வாழ்ந்தபோது, அவரைச் சுற்றி நடந்த பல அநியாயங்கள் அவர் மனதில் பூகம்பங்களாய் வெடித்திருக்கும்.

இந்த அநியாயங்களுக்கு விடை தேடி இளையோர் பலர் புரட்சிக் குழுக்களை உருவாக்கியதையும், அக்குழுக்களில் சேர்ந்ததையும் இயேசு அறிந்திருந்தார். தீவிரவாதமும், வன்முறையும் தான் தீர்வுகளா? வேறு வழிகள் என்ன? என்று அவரும் கட்டாயம் சிந்தித்திருப்பார். இந்தச் சிந்தனைகளின் விடையாக, அவர் எடுத்த முதல் முடிவு... மக்களோடு மக்களாகத் தன்னைக் கரைத்துக்கொள்ள வேண்டும் என்ற முடிவு. அந்த முடிவோடு, அந்த முனைப்போடு யோர்தான் நதியில் இயேசு இறங்கினார்.

இயேசு யோர்தானில் மக்களோடு மக்களாய் இறங்கியதற்கு ஒரு முக்கிய காரணம் தந்தையின் மீது அவர் வைத்திருந்த அளவற்ற நம்பிக்கை. கடவுள் மீது எவ்வளவு நம்பிக்கை வைக்க முடியும் என்பதற்கு பல கதைகள் நாம் கேட்டிருக்கிறோம். இதோ நமக்குப் பழக்கப்பட்ட ஒரு கதை.

பாதாளத்தில் தவறி விழுந்து விடும் ஒருவர், ஒரு மரத்தின் கிளையைப் பற்றிக்கொண்டு கடவுளைப் பார்த்து வேண்டுகிறார். கடவுள் அவரிடம் “நீ உண்மையிலேயே என்னை நம்புகிறாயா?” என்று கேட்பதற்கு, “ஆம்” என்று அம்மனிதன் மரண பயத்தில் அலறுகிறார். கடவுள் அவரிடம், “நீ என்னை முழுவதும் நம்புவதாக இருந்தால், நீ பற்றியிருக்கும் அந்த மரத்தின் கிளையை விட்டுவிடு” என்று சொல்கிறார். நமக்குத் தெரிந்த கதை இது.

இந்தக் கதையின் தொடர்ச்சியாக யாரோ ஒருவர் கூறிய ஒரு கற்பனை என் நினைவுக்கு வருகிறது. பற்றியிருக்கும் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், கொஞ்ச நேரம் அம்மனிதன் சிந்திக்கிறார். பின்னர், இன்னும் உரத்தக் குரலில், "வேறு கடவுள் யாராவது இருக்கிறீர்களா, என்னைக் காப்பாற்ற?" என்று அலறுகிறார். கடவுளிடமிருந்து வரும் அழைப்புகள் நம் நம்பிக்கைக்குச் சவால்களாக அமையும்போது, நம்மில் எத்தனைபேர், எத்தனைமுறை மற்ற கடவுள்களைத் தேடியிருக்கிறோம்!

தந்தையின்மீது ஆணித்தரமான நம்பிக்கை கொண்ட இயேசுவைப் போல வாழ்ந்த பலர், அந்தச் சூழலில் என்ன செய்திருப்பார்கள் என்றும் நாம் கற்பனை செய்து பார்க்கலாம். அந்தக் கிளையை விட்டுவிடு என்று கடவுள் சொன்னதும், இவர்கள் கிளையை ஆனந்தமாய் விட்டுவிடுவர். இதில் என்ன அற்புதம் என்றால், அந்தக் கிளையை விட்டதும், அவர்கள் அந்த பாதாளத்தில் கீழே விழுவதற்குப் பதில் மேலே பறக்க ஆரம்பித்திருப்பர். இயேசுவுக்கு அப்படி ஓர் அற்புத உணர்வு அந்த யோர்தான் நதியில் ஏற்பட்டது.

தந்தைமீது நம்பிக்கை கொண்டு, தன் பணியைத் துவக்க, இயேசு தன் முதல் அடியை யோர்தான் நதியில் எடுத்துவைத்தார். அவர் எடுத்து வைத்த முதல் அடியையே தண்ணீரில், அதுவும் ஓடுகின்ற ஆற்று நீரில் எடுத்துவைத்தார் என்பது நம் சிந்தனைகளைத் தூண்டுகிறது.

உறுதியான தரையில் நிற்பதற்கும், ஓடும் நீரில் நிற்பதற்கும் வேறுபாடுகள் அதிகம் உண்டு. ஓடும் நீரில் நிற்பது உறுதியற்ற ஓர் உணர்வைத் தரும். தனது பணிக்காலத்தில் சந்திக்கப்போகும் நிலையற்றச் சூழல்கள் ஓடும் நீரைப் போல் இருக்குமென்று இயேசு சொல்லாமல் சொன்னாரோ? தந்தையாம் இறைவனின் அன்பைத் தவிர வேறு எதுவும் தனக்கு உறுதியளிக்காது என்பதை உணர்த்த அவர் தன் பணிவாழ்வின் முதல் அடியை ஓடும் நீரில் எடுத்து வைத்தாரோ?

ஓடும் நீரில் மற்றொரு அழகும் உண்டு... தேங்கி நிற்கும் நீரை விட, ஓடும் நீரில் உயிர்கள் வாழ, வளர வாய்ப்பு அதிகம் உண்டு. இயேசுவும் ஓடும் நீரைப் போல் பலருக்கு வாழ்வளிக்க விரும்பியதால், ஓடும் ஆற்று நீரைத் தன் பணிவாழ்வின் முதல் அடையாளமாகத் தேர்ந்தெடுத்தாரோ?

யோர்தான் நதியில் இயேசு தன் திருமுழுக்கைத் தனியே பெறவில்லை. மக்களோடு, மக்களாய் கலந்து, கரைந்து நின்றார். இயேசுவின் இந்தப் பணிவு, மக்களோடு மக்களாய் கரைந்துவிட அவர் கொண்ட ஆர்வம் ஆகியவை விண்ணகத் தந்தையை மிகவும் மகிழ்விக்கிறது.

தன் மகனோ, மகளோ அர்த்தமுள்ள, பெருமை சேர்க்கும் செயல்களைச் செய்யும்போது, அவர்களை அரவணைத்து, நெற்றியில் முத்தமிட்டு, ஆசீர்வதிக்கும், பெற்றோரைப் பார்த்திருக்கிறோம். நாமும் இந்த அரவணைப்பையும், ஆசீரையும் அனுபவித்திருப்போம். அதுதான் அன்று யோர்தானில் நடந்தது. மக்களோடு மக்களாகத் தன்னை முழுவதும் இணைத்துக்கொண்ட இயேசுவைக் கண்டு ஆனந்த கண்ணீர் பொங்க தந்தையாம் இறைவன் சொன்ன வார்த்தைகள்: "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11)

இறுதியாக அன்புள்ளங்களே, சிறப்பான சில வேண்டுதல்களோடு நம் சிந்தனைகளை இன்று நிறைவு செய்வோம். சனவரி 12, இத்திங்கள் முதல், சனவரி 19, அடுத்தத் திங்கள் முடிய, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையிலும், பிலிப்பின்ஸ் நாட்டிலும் திருத்தூதுப் பயணம் மேற்கொள்கிறார்.

பல ஆண்டுகளாக உள்நாட்டுப் போரினால் காயமுற்றிருக்கும் இலங்கை மக்கள், குறிப்பாக, தமிழர்கள், திருத்தந்தையின் வருகையால் ஒப்புரவு, அமைதி நிறைந்த வாழ்வை நோக்கிச் செல்வதற்கு இறைவன் துணைபுரிய வேண்டுவோம்.

தமிழர்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் விழாவன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இலங்கையில் புகழ்பெற்று விளங்கும் மடுமாதா திருத்தலத்திற்குச் செல்கிறார். இதுவரை, துன்பங்களையும், இழப்புக்களையுமே அதிகமாக அறுவடை செய்து வந்த தமிழர்கள், திருத்தந்தையின் வருகையாலும், மடுமாதாவின் பரிந்துரையாலும், மனநிறைவையும், மகிழ்வையும் அறுவடை செய்யவேண்டுமென்று இறையருளை இறைஞ்சுவோம்.

இலங்கைக்குப் பின்னர், திருத்தந்தை பிலிப்பின்ஸ் நாட்டிற்கும் செல்கிறார். ஹையான் சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திப்பதே திருத்தந்தை இப்பயணத்தை மேற்கொள்ள முக்கிய நோக்கமாக அமைந்தது. இயற்கைப் பேரிடர்களால் அடிக்கடி துன்பங்களைச் சந்தித்துவரும் பிலிப்பின்ஸ் மக்கள், திருத்தந்தையின் வருகையால், நம்பிக்கை பெற்று வாழ்வைத் தொடரவேண்டும் என்று மன்றாடுவோம்.

விரைவில், நாம் கொண்டாடவிருக்கும் பொங்கல் விழா, உலகெங்கும் வாழும் தமிழர்களுக்கும், அனைத்து நாடுகளிலும் நிலத்தை நம்பி வாழும் விவசாயிகளுக்கும் வளமான, நிலையான எதிர்காலத்தை உருவாக்க வேண்டும் என்று இறைவனின் ஆசீரை இறைஞ்சுவோம்.

டிசம்பர், சனவரி மாதங்களில், பல இளையோர் அருள்பணியாளர்களாகத் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளனர். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கென குறிக்கப்பட்டுள்ள இந்த உலக ஆண்டில், மக்களோடு இணைந்து நடக்கவும், அவர்களை வழிநடத்தவும் தங்களை அர்ப்பணித்துள்ள இவ்விளையோரை, இறைவன் 'தன் அன்பார்ந்த மக்கள்' என்று அரவணைக்கும் உணர்வை இவர்கள் பெறவேண்டும் என்று மன்றாடுவோம்.

"என் அன்பார்ந்த மகன், (மகள்) நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்." (மாற்கு 1:11) உள்ளப் பூரிப்புடன், உன்னத இறைவன் இந்த வார்த்தைகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லக் காத்திருக்கிறார். அன்னையும் தந்தையுமான இறைவன், நம்மை வாரி அணைத்து, உச்சி முகந்து, இந்த அன்பு மொழிகளை நம் ஒவ்வொருவருக்கும் சொல்லட்டும். 

ஞாயிறு சிந்தனை நிகழ்ச்சியை உங்களுக்கு வழங்கியது வத்திக்கான் வானொலி.








All the contents on this site are copyrighted ©.