2015-01-09 14:48:00

கடுகுச் சிறுத்தாலும்.... : நீர் தரும் பாடங்கள்


கடலோரம் குருவும் அவரது சீடர்களும் நின்றுக் கொண்டிருந்தனர். அலைகள் கரையில் மோதிக் கொண்டிருந்தன. ஒரு சீடரைப் பார்த்து குரு கேட்டார், ‘உனக்கு என்ன தெரிகிறது?’

‘திரும்பத் திரும்ப வந்து மோதும் அலைகளில், விடாமுயற்சி தெரிகிறது’ என்று சீடர் சொன்னார்.

அடுத்த சீடரைக் கேட்ட போது, ‘துன்பங்கள் அலைகளைப்போல் தொடர்ந்து வந்தாலும் நாம், கரையைப் போல் உறுதியாக நின்றால், துன்பங்கள் சிதறிப் போகும்’ என்று பதில் வந்தது.

குரு சொன்னார், ”சில நேரங்களில் அலைகளாய் இரு; சில நேரங்களில் கரையாய் இரு."

அதே தண்ணீரைக் காட்டி குரு கேட்டார், ‘இதுவே மேலும் குளிர்ந்தால் என்னவாகும்?’  என்று.

‘பனிக்கட்டி’என்றார் சீடர். ‘கொதித்தால்…?’ என்று குரு கேட்க,  ‘நீராவி’ என்று பதிலளித்தார் இன்னொரு சீடர்.

குரு சொன்னார், ”மனிதனும் குளிரும் போது திடமாகிறான், கொதிக்கும் போது ஆவியாகிறான்.” 

ஆவியாகவும், திடமாகவும், அலையாகவும், கரையாகவும், ஏன், மனம் வைத்தால் மனிதனாகவும்கூட மனிதனால் முடியும். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.