சன.07,2015. மியான்மாரில் இடம்பெறும் வகுப்புவாத வன்முறை முடிவுக்குக் கொண்டுவரப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார், கர்தினாலாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டுப் பேராயர் Charles Maung Bo.
இம்மாதம் 4ம் தேதி ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரைக்குப் பின்னர், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்துள்ள இருபது புதிய கர்தினால்களில் ஒருவராகிய யாங்கூன் பேராயர் Charles Bo அவர்கள், அந்நாட்டில் சமய சகிப்புத்தன்மை கடைப்பிடிக்கப்படுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தமதத்தினரைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியான்மாரில், குறிப்பாக, Rakhine மற்றும் Kachin மாநிலங்களில் அண்மை ஆண்டுகளில் வகுப்புவாதப் பதட்டநிலைகள் அதிகம் காணப்படும்வேளை, அந்நாட்டில் சமய சகிப்புத்தன்மை காக்கப்படுவதற்கு உழைக்கவிருப்பதாகக் கூறினார் பேராயர் Charles Bo.
மியான்மாரில் வாழும் ஏறக்குறைய எட்டு இலட்சம் ரோகின்யா இனத்தவர், உலகில் அதிகமாக நசுக்கப்படும் சிறுபான்மை இனத்தவரில் ஓர் இனமாக இருப்பதாக ஐக்கிய நாடுகள் நிறுவனம் கூறியுள்ளது.
மேலும், பெரும்பான்மையான கிறிஸ்தவர்களைக் கொண்ட கச்சின் மாநிலத்தில் 17 ஆண்டுகள் இடம்பெற்ற மோதல்களில் ஏறக்குறைய ஒரு இலட்சம் பேர் தங்கள் வீடுகளைவிட்டு வெளியேறியுள்ளனர்.
ஆதாரம் : AFP
All the contents on this site are copyrighted ©. |