2014-12-30 14:37:19

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 7


RealAudioMP3 கிரகோரியன் நாள்காட்டியின்படி, ஆண்டின் முதல் மாதம், Janus என்ற உரோமையத் தெய்வத்தின் பெயரால், ஜனவரி என்றழைக்கப்படுகிறது. Janus தெய்வத்திற்கு இரு முகங்கள். ஒரு முகம் பின்னோக்கிப் பார்ப்பதுபோலவும், மற்றொரு முகம் முன்னோக்கிப் பார்ப்பது போலவும் அமைந்திருக்கும். முடிவுற்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கவும், புலரவிருக்கும் புத்தாண்டை முன்னோக்கிப் பார்க்கவும் Janus தெய்வம் நினைவுறுத்துவதால், ஆண்டின் முதல் மாதம் இந்தத் தெய்வத்தின் பெயரைத் தாங்கியுள்ளது. ஆண்டின் இறுதிநாளையும் புதிய ஆண்டின் முதல் நாளையும் நெருங்கிவந்துள்ளோம். இத்தருணத்தில், முன்னோக்கியப் பார்வையைவிட, பின்னோக்கிய பார்வையும், எண்ணங்களும் நம் மனங்களை நிறைத்திருப்பதை உணரலாம்.

முடிவுறும் இந்த ஆண்டை, கடந்த சில நாட்களாக, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும், நாளிதழ்களும், இணையத் தளங்களும் அலசி வருகின்றன. பின்னோக்கிய இந்த அலசல், ஒவ்வொருவரின் கண்ணோட்டத்தைப் பொருத்து மாறுபடும். என்னைப் பொருத்தவரை, 2014ம் ஆண்டு, முதல் உலகப் போரின் நூற்றாண்டு என்பதே என் மனதில் பதிந்த ஆழமான எண்ணம். இந்த நூற்றாண்டு நினைவையொட்டி, இவ்வாண்டு செப்டம்பர் மாதம், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், முதல் உலகப்போரில் இறந்த இத்தாலிய வீரர்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ள Redipuglia கல்லறைக்குச் சென்று, திருப்பலி நிறைவேற்றினார். இத்திருப்பலியில் மறையுரை வழங்கியபோது, தற்போது உலகின் பல பகுதிகளில் போர்கள் நடைபெற்றுவருவதை, ‘மூன்றாம் உலகப் போர்’ என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

மனித வரலாற்றில், போர்கள் நடைபெற்றபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தை போர்க்களம் என்று ஒதுக்கி, அங்கு படைகள் மோதி வந்தன. ஆனால், இன்றையப் போர்கருவிகள், தொழில் நுட்பத்தில் முன்னேறிவிட்டதால், நாம் வாழும் பகுதிகளே போர்க்களங்களாக மாறிவருகின்றன. இது மட்டுமல்லாமல், 'போர்' என்ற அறிவிப்பு ஏதுமின்றி, எதிர்பாராத நேரங்களில், எதிர்பாராத இடங்களில் தீவிரவாதிகளின் தாக்குதல்கள் பெருகிவருவதால், உலகம் முழுவதும் போர்க்களமாக மாறி வருகின்றது. இதையே, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ‘மூன்றாம் உலகப் போர்’ என்று குறிப்பிட்டாரோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இரு வாரங்களுக்கு முன் (டிசம்பர் 16), பாகிஸ்தான், பெஷாவர் நகரில், தாலிபான் வன்முறையாளர்கள், இரக்கமேதுமின்றி பள்ளி மாணவர்களையும், ஆசிரியர்களையும் கொன்று குவித்த செய்தி, நம்மை அதிர்ச்சியில் உறைய வைத்தது. கடந்த சில ஆண்டுகளாக, பாகிஸ்தான் இராணுவம் தங்கள் பகுதிகளில் மேற்கொண்ட தாக்குதல்களில் தங்கள் குடும்பங்களையும், குழந்தைகளையும் பறிகொடுத்ததால் இந்தத் தாக்குதலைத் தாங்கள் மேற்கொண்டதாக, தாலிபான் குழுவினர் கூறியது, நம்மை மேலும் அதிர்ச்சியுறச் செய்தது. தற்போது, பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இவ்விதம் பழிக்குப் பழி என்ற முடிவில்லா சங்கிலி தொடர்கிறது.
இந்தக் கொடூர நிகழ்வுக்குப் பின், பாகிஸ்தான் தொலைக்காட்சியில் நான் கண்ட ஒரு செய்தித் தொகுப்பு என்னை வெகுவாகப் பாதித்தது. தீவிரவாதிகளை தூக்கிலிடுவதை நிறுத்திவைத்திருந்த பாகிஸ்தான் அரசு, மீண்டும் அவர்களைத் தூக்கிலிடும் தண்டனைகளைத் துவங்கியுள்ளதை தாங்கள் வரவேற்பதாக ஒரு சிலர் இந்நிகழ்வில் பேசினர். கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த 5 வயது சிறுவனை, தொலைக்காட்சி தனிப்பட்ட வகையில் காட்டியது. அச்சிறுவன், ஓர் இராணுவ வீரரைப் போல உடையணிந்திருந்தான். அவன் கையில் ஒரு பொம்மைத் துப்பாக்கி வேறு! துணிவிருந்தால், தாலிபான்கள் தன்னிடம் மோதிப் பார்க்குமாறு அச்சிறுவன் சவால் விடுத்தான். தனி ஆளாய் தான் 20 தாலிபான்களைச் சுட்டு வீழ்த்தப் போவதாக அந்தப் பிஞ்சு மனம் தொலைக்காட்சியில் பறைசாற்றியது. இதைக் கேட்டபோது, உண்மையில் என் மனம் வேதனையில் வெந்துபோனது.
பாகிஸ்தானிலும், இன்னும், உலகின் பல நாடுகளிலும், வயதில் முதிர்ந்த பலர், பழிக்குப் பழி என்ற வெறியினால், சிந்திக்கும் திறனை இழந்து தவிக்கின்றனரோ என்று எண்ணத் தோன்றுகிறது. இவர்கள், தங்கள் சொல்லாலும் செயலாலும் வளர்த்துவரும் பழிக்குப் பழி என்ற வெறியை, பிஞ்சுக் குழந்தைகளின் மனங்களில் வளர்ப்பது, மிகுந்த வேதனையைத் தருகிறது. அமைதியின் இளவரசன் இயேசுவின் வருகையைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் காலத்தில், குழந்தைகள் மனதில் வெறி என்ற அமிலத்தை ஊற்றாமல், மன்னிப்பு என்ற மருந்தை ஊற்றி வளர்க்கும் நல்மனம் கொண்டோர் இவ்வுலகில் பெருகவேண்டும் என்று மன்றாடுவோம்.

நம் ஒவ்வொருவரின் தனிப்பட்ட வாழ்விலோ, அல்லது உலக நிகழ்வுகளிலோ கடந்து சென்ற ஆண்டைப் பின்னோக்கிப் பார்க்கும்போது, முதலில் மனதில் தோன்றுவது நம்மைத் துன்புறுத்திய நிகழ்வுகள். ஆழமான, நீண்ட கால பாதிப்புக்களை மனதில் உருவாக்கும் வலிமை பெற்றவை துன்பங்கள். உடலளவில் உருவான துன்பங்கள் தீர்வதற்கு மருத்துவ உதவியை நாடியிருப்போம். உள்ளத்தளவில் உருவான துன்பங்கள் நம்மில் இன்னும் தீராமல் இருக்க வாய்ப்புண்டு. உறவுகளால் உண்டான துன்பங்களை, மன்னிக்க முடியாமல் இருந்தால், அவை, நம் உள்ளத்தில் சுமையாகக் குடியேறியிருக்கும். மன்னிக்க மறுத்ததால், வதைப்போரின் கரங்களில் ஒப்படைக்கப்பட்ட பணியாள் உவமையை ஆண்டின் இறுதி நாளன்று மீண்டும் ஒருமுறை சிந்திக்க இறைவன் நமக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதை ஒரு வரமாகக் கருதலாம்.

மன்னிப்பு வழங்குவதால் இவ்வுலகம் தான் பட்ட காயங்களிலிருந்து குணமாகும் என்பதற்கு, இரண்டாம் உலகப் போரில் நாத்சி வதை முகாம்களுக்குப் பிறகு நடந்த மனதை உருக்கும் பல்லாயிரம் மன்னிப்பு நிகழ்ச்சிகள் பாடமாக அமைகின்றன. நாத்சி வதை முகாம் ஒன்றில் சுவற்றில் ஒரு செபம் எழுதப்பட்டிருந்தது. அங்கு சித்ரவதைகளை அனுபவித்த ஒரு கைதி இதை எழுதியிருக்க வேண்டும். தங்களுக்குத் தீமை செய்தவர்களை, இறைவன் மன்னிக்கவேண்டும் என்ற வேண்டுதலாக ஒலிக்கும் அவ்வரிகளுக்குச் செவிமடுப்போம்.
“இறைவா, நல்ல மனதுள்ளவர்களை நினைவு கூர்ந்தருளும். அவர்களை மட்டுமல்ல, தீமை செய்வோரையும் நினைவு கூர்ந்தருளும். அவர்கள் எங்களுக்கு இழைத்தக் கொடுமைகளை மட்டும் நினையாதேயும். அந்தக் கொடுமைகளால் விளைந்த பயன்களையும் நினைவு கூர்ந்தருளும். இந்தக் கொடுமைகளால் எங்களிடையே ஏற்பட்ட ஒற்றுமை, ஒருவரை ஒருவர் தேற்றிய மனப்பாங்கு, எங்கள் அஞ்சா நெஞ்சம், நாங்கள் காட்டிய தாராள குணம்... இவற்றையும் நினைவு கூர்ந்தருளும். எங்களை வதைத்தவர்களும், நாங்களும் இறுதித் தீர்வைக்கு வரும் போது, அவர்கள் விளைத்த தீமைகளால் எங்களுக்கு ஏற்பட்ட பயன்களைக் கண்ணோக்கி, அவர்கள் தீமைகளை மன்னித்து அவர்களுக்கு நல் வாழ்வைத் தந்தருளும்.”

தவறு செய்யும் ஒருவரை, எத்தனை முறை மன்னிப்பது, ஏழுமுறை மட்டுமா? என்று கேட்ட புனித பேதுருவிடம், வரைமுறை ஏதுமின்றி மன்னிக்கவேண்டும் என்று இயேசு பதிலளித்தார். இஸ்ரயேல் மக்கள் மத்தியில், முழுமையைச் சுட்டிக்காட்டும் 7 என்ற எண்ணைப் பயன்படுத்தி, 'எழுபது தடவை ஏழு முறை' (மத்தேயு 18: 22) மன்னிக்கவேண்டும் என்று இயேசு அழுத்தந்திருத்தமாகக் கூறினார்.
மன்னிப்பு என்பது, அரைகுறையாக, அளந்து பார்த்துத் தரவேண்டிய கடனாக இல்லாமல், முழுமையானதாக, அளவற்ற வகையில் அள்ளித்தரவேண்டிய கொடையாக இருக்கவேண்டும் என்பதே பேதுருவுக்கும், நமக்கும் இயேசு வழங்கும் பாடம். இந்தப் பாடத்தை இன்னும் ஆழமாக வலியுறுத்த, இயேசு கூறிய உவமையே, மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை. பொதுவாகவே, சுவாசிப்பது எப்படி மனித இயற்கையோ அப்படியே மன்னிப்பதும் மனித இயல்பானப் பண்பாக மாறவேண்டும் என்பதே, இயேசு நமக்கு விடுத்துள்ள உன்னத சவால்!
மன்னிப்பு நம் இயல்பாகவே மாற வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தும் வண்ணம் பலர் சொன்ன கருத்துக்களில் என் மனதில் ஆழமாய்ப் பதிந்தவை, Mark Twain சொன்ன அறுபுதமான வார்த்தைகள்: “Forgiveness is the fragrance that the violet sheds on the heel that has crushed it” அதாவது, தன்னை மிதித்து, சின்னாபின்னமாக்கிய கால்களில் ஒரு மலர் பதிக்கும் நறுமணமே, மன்னிப்பு.

நம்மைச் சுற்றியுள்ள இயற்கையில் இது போல் பல எடுத்துக்காட்டுக்களைக் காணலாம். தன்னைக் கசக்கிப் பிழிபவன் கையில் இனிய சாறாய் கரும்பு மாறுகிறதே, அதுவே மன்னிப்பு. தன்னைச் சுட்டெரித்தாலும் சந்தனம் நறுமணம் தருகிறதே, அதுவே மன்னிப்பு. தங்களை வெட்டுகிறார்கள், விறகாய் எரிக்கிறார்கள் என்பதற்காக மரங்கள் நிழல் தர மறுக்கின்றனவா? இல்லையே. கலீல் கிப்ரான் என்ற கவிஞர் சொன்ன வரிகள் நினைவுக்கு வருகின்றன: கொடுப்பதே மரத்தின் இயல்பு, அழகு. நிழல் கொடுக்க, கனி கொடுக்க ஒரு மரம் மறுத்தால், அதன் இயல்பு மாறிவிடும்; அது இறந்துவிடும்.
இயற்கையில் இப்படி ஒவ்வொன்றும் தங்களுக்குத் துன்பங்கள் விளைவித்தவருக்கும் நல்லதைக் கொடுப்பதையே தங்கள் இயல்பாக கொண்டிருக்கும்போது, மனித இயல்பு மட்டும், என் நேரத்திற்கு ஒன்றாய் மாறுகிறது?
வாழ்வில் அன்பையும், மகிழ்வையும் நிறைவாய் உணர்வதைவிட வேறு ஓர் உயர்ந்த இயல்பு, மனிதருக்குக் கிடையாது. அந்த இயல்பை அடைவதற்கு அடித்தளம், மன்னிப்பு. மன்னிப்பு தருவதும், பெறுவதும் முழு மனித நிறைவுக்கு நம்மை இட்டுச் செல்லும்.

ஒவ்வோர் ஆண்டும் புத்தாண்டு நாளை உலக அமைதி நாள் என்று கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிவருகிறது. 2015ம் ஆண்டு உலக அமைதி நாளுக்கென திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் விடுத்துள்ள செய்திக்கு, "இனி அடிமைகள் இல்லை, ஆனால் உடன்பிறப்புக்களே" என்ற மையக்கருத்தைத் தேர்ந்துள்ளார். மன்னிக்க முடியாத மனநிலையால், ஒருவர் ஒருவரை அடிமைப்படுத்தும் வன்முறைகள் இவ்வுலகிலிருந்து, இவ்வாண்டின் இறுதியில் விடைபெற வேண்டும் என்று மன்றாடுவோம். துன்பமும், வெறுப்பும் நிறைந்த பழைய காயங்களால் நம்மை நாமே அடிமைப்படுத்திக் கொள்ளாமல் விழிப்பாயிருப்போம். தனி மனிதர்களின் அமைதியே உலக அமைதியை உறுதி செய்யும்.
உலக அமைதி என்று சொன்னதும், அசிசி நகர் புனித பிரான்சிஸ் அவர்கள் உருவாக்கிய “அமைதியின் கருவியாய் என்னை உருவாக்கும்” என்ற செபம் நினைவுக்கு வருகிறது. அந்த அற்புத செபத்தின் ஒரு பகுதியோடு ‘மன்னிக்க மறுத்தப் பணியாள் உவமை’யில் நாம் மேற்கொண்ட தேடலை நிறைவு செய்வோம்.
"மன்னிப்பதாலேயே, மன்னிப்பு பெறுகிறோம்.
கொடுப்பதாலேயே பெறுகிறோம்.
இறப்பதாலேயே நிறைவாழ்வில் பிறக்கிறோம்."








All the contents on this site are copyrighted ©.