திருத்தந்தை பிரான்சிஸ் : இன்று மக்கள் அன்பின்மையாலும் துன்புறுகின்றனர்
டிச.30,2014. “இன்று மக்கள் வறுமையினால் துன்புறுகின்றனர், ஆனால் அன்பின்மையாலும் துன்புறுகின்றனர்”
என்று, தனது டுவிட்டரில் இச்செவ்வாயன்று எழுதியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
வருகிற மார்ச் மாதத்தில் தென் இத்தாலியின் கம்ப்பானியா மாநிலத்துக்குத் திருத்தூதுப்
பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், பொம்ப்பை அன்னை மரியா திருத்தலத்துக்கும்
செல்வார் என திருப்பீடம் அறிவித்துள்ளது. புனித ஜனுவாரியுஸ் விழாவான மார்ச் 21ம் தேதி
நேப்பிள்ஸ் நகருக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளும் திருத்தந்தை, பொம்ப்பை அன்னை
மரியா திருத்தலத்துக்கும் செல்வார் என நேப்பிள்ஸ் கர்தினால் கிரெசென்சியோ சேப்பே அவர்கள்
அறிவித்தார். 1979ம் ஆண்டு அக்டோபர் 21ம் தேதி பொம்ப்பை சென்றுள்ள புனித திருத்தந்தை
2ம் ஜான் பால் அவர்கள், செபமாலை ஆண்டின் நிறைவாக, 2003ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதியும்
அங்குச் சென்றுள்ளார். முன்னாள் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அவர்களும், 2008ம் ஆண்டு
அக்டோபரில் பொம்ப்பை செபமாலை அன்னை மரியா திருத்தலத்துக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொண்டுள்ளார்.