2014-12-27 14:44:22

குழந்தைகள் வளர்ந்து முன்னேறுவதற்குச் சிறந்த அமைப்பு திருமண வாழ்வு


டிச.27,2014. குழந்தைகள் வளர்ந்து முன்னேறுவதற்குச் சிறந்த அமைப்பு திருமண வாழ்வு என்று, திருக்குடும்ப விழாவுக்கென வெளியிட்டுள்ள திருத்தூது அறிக்கையில் கூறியுள்ளார் பிரித்தானிய ஆயர் ஒருவர்.
டிசம்பர் 28, இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்படும் திருக்குடும்ப விழாவுக்கென திருத்தூது அறிக்கை வெளியிட்டுள்ள பிர்மிங்காம் பேராயர் Bernard Longley அவர்கள், நம் பெற்றோர் வழியாக இறைவன் கொடுத்துள்ள வாழ்வு எனும் கொடையை மதிப்பதற்கு நாம் திருமண வாழ்க்கையில் கற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.
தந்தை-தாய் இவர்களின் அன்பு உறவின் மூலமாக நாம் பிறரின் வாழ்வை மதிப்பதற்கும் கற்றுக்கொள்கிறோம் என்று கூறியுள்ள பேராயர் Longley அவர்கள், ஒரு தந்தை மற்றும் ஒரு தாயின் அன்பையே ஒவ்வொரு குழந்தையும் விரும்புகின்றது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
வருகிற ஆண்டில் குடும்பம் குறித்த உலக ஆயர்கள் மாமன்றத்தை நடத்துவதற்கு கத்தோலிக்கத் திருஅவை தயாரித்துவரும்வேளை, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர்களும் தங்களின் பங்குச் சமூகங்களை இதற்காகத் தயாரிக்குமாறு கேட்டுள்ளதாகவும் பேராயரின் அறிக்கை கூறுகின்றது.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.