துன்பம் நிறைந்த சூழல்களில் வேலை செய்யும் குடியேற்றதாரர்மீது மிகுந்த அக்கறை காட்ட ஐ.நா.
அழைப்பு
டிச.19,2014. இன்றும் பல குடியேற்றதாரர்கள் துன்பம் நிறைந்த மற்றும் அநீதியான சூழல்களில்
வாழ்கின்றனர் மற்றும் வேலை செய்கின்றனர் என்று, ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன் அவர்கள்
கூறினார். டிசம்பர் 18, இவ்வியாழனன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக குடியேற்றதாரர் தினத்திற்கென
வெளியிட்ட செய்தியில், உலகின் 23 கோடியே 20 இலட்சம் குடியேற்றதாரரின் மனித உரிமைகள் நிறைவேற்றப்படவும்,
பாதுகாக்கப்படவும் அழைப்பு விடுத்துள்ளார் பான் கி மூன். குடியேற்றதாரர் குறித்த அனைத்துலக
ஒப்பந்தத்தை அனைத்து நாடுகளும் செயல்படுத்துமாறும் தனது செய்தியில் கேட்டுள்ள ஐ.நா. பொதுச்செயலர்,
இவ்வாண்டில் ஏறக்குறைய ஐந்தாயிரம் குடியேற்றதாரர் தங்களின் கடல்வழி மற்றும் மலைப்பாதைப்
பயணங்களில் இறந்துள்ளனர் என்றும் கூறியுள்ளார். உலகில் குடியேற்றதாரரின் எண்ணிக்கை
அதிகரித்து வருவதையொட்டி, இரண்டாயிரமாம் ஆண்டு டிசம்பர் 4ம் தேதி ஐ.நா. பொது அவை உலக
குடியேற்றதாரர் தினத்தை ஏற்படுத்தியது. 1990ம் ஆண்டு டிசம்பர் 18ம் தேதியன்று, ஐ.நா.
பொது அவை, அனைத்து குடியேற்றதாரப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களின்
உரிமைகள் பாதுகாக்கப்படுவது குறித்த அனைத்துலக ஒப்பந்தத்தைக் கொண்டுவந்தது. அந்த நாளான
டிசம்பர் 18ம் தேதியை உலக குடியேற்றதாரர் தினமாகவும் அறிவித்தது ஐ.நா. பொது அவை.