2014-12-18 15:43:46

திருத்தந்தையின் பிறந்தநாள் கொண்டாட்டங்களில் எட்டு வறியோர்


டிச.18,2014. டிசம்பர் 17, இப்புதனன்று கொண்டாடப்பட்ட திருத்தந்தையின் பிறந்தநாளையொட்டி, எட்டு வறியோர் திருத்தந்தையை சிறப்பாகச் சந்தித்து, அவருக்கு, சூரிய காந்தி மலர்களைப் பரிசளித்தனர்.
திருத்தந்தையின் தர்மச் செயல்களுக்குப் பொறுப்பாகச் செயலாற்றும் பேராயர் Konrad Krajeweski அவர்கள், அன்னை தெரேசாவின் சகோதரிகள் நடத்திவரும் ஒரு காப்பகத்திலிருந்து ஐந்து வறியோரையும், மரியாவின் கொடை என்றழைக்கப்படும் மனநலம் குன்றியோர் இல்லத்தில் மூவரையும் தேர்ந்தெடுத்து, திருத்தந்தையை, வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் சந்திக்கும்படி ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.
சூரியனை எப்போதும் காண்பதால் நம்பிக்கை இழக்காமல் இருக்கும் சூரியகாந்தியை திருத்தந்தையின் பிறந்தநாளுக்கு அடையாள பரிசாக அளிக்க விரும்பியதாக ஐந்து வறியோரில் ஒருவரான, நைஜீரிய நாட்டு இளைஞன் கூறினார்.
திருத்தந்தை தென் கொரியாவுக்குப் பயணம் மேற்கொண்ட வேளையில் அவர் சந்தித்த மாற்றுத் திறனுடைய குழந்தைகள் மடித்து அனுப்பிய பல்லாயிரம் பிஸ்கட் பாக்கெட்டுகள் வத்திக்கானை வந்தடைந்தன.
திருத்தந்தையின் பிறந்தநாளுக்கென, உரோம் நகரில் உள்ள சில ஏழைகளுக்கு உணவளிக்க, ஸ்பெயின் நாட்டிலிருந்து 800 பவுண்டுகள் எடையுள்ள கோழி இறைச்சி வந்து சேர்ந்தது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.