2014-12-17 16:24:26

காவல்துறையினருக்கு ஆஸ்திரேலிய ஆயர் பேரவைத் தலைவரின் நன்றி


டிச.17,2014. ஆஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் Martin Palace Cafe என்ற உணவகத்தில் பிணையக் கைதிகளைக் காப்பாற்ற தங்கள் உயிரைப் பணயம் வைத்த காவல்துறையினருக்கு, ஆஸ்திரேலிய ஆயர் பேரவையின் தலைவர், பேராயர் Denis Hart அவர்கள் நன்றி தெரிவித்துள்ளார்.
காப்பற்றப்பட்டவர்களுக்காக நன்றி கூறும் வேளையில், இத்தாக்குதலில் மரணமடைந்தவர்களுக்காக ஆஸ்திரேலியத் தலத்திருஅவை தன் செபங்களைப் பகிர்ந்துள்ளது என்று பேராயர் Hart அவர்கள் தன் செய்தியில் கூறியுள்ளார்.
காவல் துறையினர், அவசர உதவி அமைப்பினர், மருத்துவப் பணியாளர்கள் ஆகிய அனைவரும் துரிதமாகச் செயல்பட்டதால் பல உயிர்களைக் காக்க முடிந்தது என்றும் பேராயரின் செய்தி கூறுகிறது.
அமைதியின் இளவரசரை எதிர்நோக்கியிருக்கும் திருவருகைக் காலத்தில், ஒரு கடினமான, ஆபத்தானச் சூழலிலிருந்து பல உயிர்களைக் காத்தவர்களுக்கு நன்றி கூறும் வேளையில், நிலையான அமைதி இவ்வுலகில் வர அனைவரும் செபிப்போம் என்று, இந்த உணவகம் அமைந்துள்ள Broken Bay மறைமாவட்ட ஆயர், Peter Comensoli அவர்கள் மடல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

ஆதாரம் : ICN








All the contents on this site are copyrighted ©.