பாப்புவா கினியில் இடம்பெறும் மாந்திரியச் செயல்களுக்கு ஆயர் வன்மையான கண்டனம்
டிச.16,2014. பாப்புவா கினி நாட்டில் மாந்திரியச் செயல்களால் இடம்பெறும் சித்ரவதைகள்
மற்றும் கொலைகளுக்கு எதிரான தனது வன்மையான கண்டனத்தை வெளியிட்டுள்ளார் அந்நாட்டு ஆயர்
ஒருவர். பாப்புவா கினி நாட்டில் பலர் பில்லிசூனியத்தில் நம்பிக்கை வைத்து அதனைச் செயல்படுத்துகின்றனர்
என்று கூறிய அந்நாட்டின் Wabag ஆயர் Arnold Orowae அவர்கள், அப்பாவிகளையும், நலிந்தவர்களையும்
குற்றம் சுமத்தும் இத்தீய பழக்கத்தைக் கைவிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். பில்லிசூனியக்காரர்களால்
அப்பாவி மக்கள் அநியாயமாகக் குற்றம் சாட்டப்பட்டு சித்ரவதைகளுக்கும், கொலைகளுக்கும் ஆளாகின்றனர்
என்றும் ஆயர் கூறினார். பாப்புவா கினி நாட்டில், 27 விழுக்காட்டுக் கத்தோலிக்கர் உட்பட
ஏறக்குறைய எல்லாரும் கிறிஸ்தவர்கள். எனினும், இம்மக்களில் பலர் தங்களின் மத நம்பிக்கையை
தங்களின் பூர்வீக இன நம்பிக்கை மற்றும் பழக்கங்களுடன் தொடர்புபடுத்துகின்றனர் எனக் கூறப்படுகின்றது.