டிச.16,2014. ஈராக்கின் கிர்குக் மாநிலத்தில் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத்
தெரிவிக்கும் நோக்கத்தில், டிசம்பர் 25ம் தேதியை அரசு விடுமுறையாக அறிவித்துள்ளார் அம்மாநில
ஆளுனர். கிறிஸ்து பிறப்பைக் கொண்டாடும் கிறிஸ்மஸ் பெருவிழாவன்று, கிர்குக் சமுதாயமும்,
அனைத்து நிறுவனங்களும் கிறிஸ்தவர்களுடன் ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவிக்கும் நோக்கத்தில்
இப்பெருவிழா நாளை பொது விடுமுறையாக அறிவிப்பதாகத் தெரிவித்துள்ளார் Necmettin Karim.
ஈராக் கல்தேய வழிபாட்டுமுறை முதுபெரும் தந்தை லூயிஸ் சாக்கோ அவர்கள் தலைமையிலான குழு
இஞ்ஞாயிறன்று கிர்குக் ஆளுனர் Necmettin அவர்களைச் சந்தித்தபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும்,
ஈராக்கின் மொசூல் மற்றும் நினிவேப் பகுதிகளை ஐஎஸ் இஸ்லாம் நாட்டுத் தீவிரவாதிகள் கைப்பற்றியதைத்
தொடர்ந்து, அவ்விடங்களைவிட்டு வெளியேறியுள்ள இலட்சக்கணக்கான கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும்
நெருக்கடி நிலைகள் உட்பட பல முக்கிய விவகாரங்கள் இச்சந்திப்பின்போது பேசப்பட்டதாக பீதெஸ்
செய்தி நிறுவனம் கூறியது.