வருகிற பிப்ரவரி 14, 15 தேதிகளில் புதிய கர்தினால்கள் அவை
டிச.12,2014. “குவாதலூப்பே அன்னை மரியே, எங்களுக்காக மன்றாடும்!”என்ற செபத்தை, இவ்வன்னையின்
விழாவான இவ்வெள்ளியன்று தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ். மேலும்,
குவாதலூப்பே அன்னை மரியா விழாவை முன்னிட்டு இவ்வெள்ளி மாலை ஆறு மணிக்கு வத்திக்கான் தூய
பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவது அவரது இவ்வெள்ளி
நிகழ்வுகளில் ஒன்றாக உள்ளது. இன்னும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புதிய கர்தினால்களை
நியமிக்கும் புதிய கர்தினால்கள் அவை, வருகிற பிப்ரவரி 14, 15 தேதிகளில் இடம்பெறும் என்று
திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் அருள்பணி பெதரிக்கோ லொம்பார்தி அவர்கள் இவ்வியாழனன்று
பத்திரிகையாளர் கூட்டத்தில் அறிவித்தார். புதிய கர்தினால்களின் பெயர்கள் வருகிற சனவரி
பாதியில் அறிவிக்கப்படக்கூடும் என்றும், பிப்ரவரி 12, 13 தேதிகளில் உலகின் அனைத்துக்
கர்தினால்களுடன் கூட்டம் நடத்திய பின்னர், புதிய கர்தினால்கள் அவை இடம்பெறும் என்றும்
அறிவித்தார் அருள்பணி லொம்பார்தி. திருப்பீடத் தலைமையகச் சீரமைப்புக்குத் திருத்தந்தைக்கு
ஆலோசனை கூறும் ஒன்பது கர்தினால்களின் அடுத்த கூட்டம் பிப்ரவரி 9ம் தேதி முதல் 11ம்
தேதி வரை வத்திக்கானில் இடம்பெறும் என்றும் கூறினார் அருள்பணி லொம்பார்தி. தற்போது
திருஅவையில் 208 கர்தினால்கள் உள்ளனர், இவர்களில் எண்பது வயதுக்குட்பட்டவர்கள் 112. எண்பது
வயதுக்குட்பட்ட கர்தினால்களே புதிய திருத்தந்தையைத் தேர்ந்தெடுப்பார்கள்.