2014-12-11 16:13:29

பாகிஸ்தான் இளையோருக்கு Malala, ஒரு நம்பிக்கை தீபம் - காரித்தாஸ் அமைப்பு


டிச.11,2014. பாகிஸ்தானில் உள்ள அனைத்து சிறுமிகளுக்கும், இளையோருக்கும், இளம்பெண் Malala Yousafzai அவர்கள், ஒரு நம்பிக்கை தீபமாக மாறியுள்ளார் என்று பாகிஸ்தான் காரித்தாஸ் அமைப்பின் இயக்குனர், Amjad Gulzar அவர்கள் கூறியுள்ளார்.
கல்வி ஒன்றே பாகிஸ்தானில் நல்ல மாற்றங்களை உருவாக்க முடியும் என்ற கருத்தை வலியுறுத்திய மலாலா அவர்கள், பாகிஸ்தான் தலத்திருவை, கல்விப் பணியில் இன்னும் தீவிரமாக ஈடுபட ஒரு சவாலை முன்வைத்துள்ளார் என்று Gulzar அவர்கள் கூறினார்.
நார்வே நாட்டின் Oslo நகரில், இப்புதனன்று உலக அமைதிக்கென வழங்கப்படும் நொபெல் விருதைப் பெற்ற 17 வயது இளம்பெண் மலாலா அவர்கள், இளம் பெண்களின் கல்வி என்ற அடிப்படை உரிமைக்காக போராடி, உலகின் கவனத்தை ஈர்த்தவர்.
தன்னைப் பெரிதும் கவர்ந்த முன்னாள் பாகிஸ்தான் பிரதமர், பெனசிர் புட்டோ அவர்களைப் போல தானும் அரசியலில் ஈடுபட்டு, பாகிஸ்தானை ஒரு முன்னணி நாடாக உருவாக்க விழைவதாக இளம்பெண் மலாலா அவர்கள் நொபெல் அமைதி விருதைப் பெறுவதற்கு முன் அளித்த ஒரு பேட்டியில் குறிப்பிட்டார்.
இந்தியாவின் கைலாஷ் சத்யார்த்தி அவர்களுடன் இளம்பெண் மலாலா அவர்களும் நொபெல் அமைதி விருதை இணைந்து பெறுவது, இந்தியா, பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளையும், இந்து முஸ்லிம் என்ற இரு மதங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி என்று, நொபெல் விருதுக் குழுவினர் ஏற்கனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : AsiaNews / BBC








All the contents on this site are copyrighted ©.