2014-12-11 16:12:26

திருத்தந்தை பிரான்சிஸ் : தாயின் அன்பைக் கணக்கெடுப்பவர்களாக நாம் மாறுகிறோம்


டிச.11,2014. "யாக்கோபு என்னும் புழுவே, இஸ்ரயேல் என்னும் பொடிப்பூச்சியே, அஞ்சாதிரு: நான் உனக்குத் துணையாய் இருப்பேன்" (எசாயா 41: 14) என்று இறைவன் கூறியிருப்பது, ஒரு குழந்தையிடம் கொஞ்சும் தாயை நினைவுறுத்துகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
இஸ்ரயேல் மக்களுக்கு ஆறுதல் தரும் வகையில் இறைவன் பேசுவதாக, இறைவாக்கினர் எசாயா கூறும் வார்த்தைகளை மையப்படுத்தி, இவ்வியாழன் காலை, சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில் மறையுரை வழங்கினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
குழந்தைக்குத் தாலாட்டுப் பாடும்போதும், குழந்தையோடு கொஞ்சும்போதும் ஒரு தாய் பயன்படுத்தும் வார்த்தைகள், தாயின் மென்மையான உள்ளத்தை வெளிப்படுத்தும் வார்த்தைகளாக வெளிவரும் என்றும், பல வேளைகளில் இந்த வார்த்தைகளுக்கு பொருள் தேடுவது பயனளிக்காது என்றும் திருத்தந்தை எடுத்துரைத்தார்.
இஸ்ரயேல் மக்களுடன் பேசும் இறைவனும் இத்தகைய நிலையில் பேசுகிறார் என்று கூறிய திருத்தந்தை, கனிவுடன் நம்மை அணைக்கும் தாயின் அன்பைக் கணக்கெடுப்பவர்களாக நாம் மாறுகிறோம் என்று சுட்டிக்காட்டினார்.
பரிசேயர்கள், மதத் தலைவர்களைப் போல, சுயநலத்தால் கடவுளின் அன்பை நாம் கணக்கெடுக்கும் போதெல்லாம், அந்த அன்பிற்கு நாம் எல்லைகள் வகுத்து, கடவுளையே சிறைப்படுத்துகிறோம் என்று திருத்தந்தை தன் மறையுரையில் விளக்கினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.