திருத்தந்தை பிரான்சிஸ் : சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள்
வறியோரை வெகுவாகப் பாதிக்கும்
டிச.11,2014. சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டில் கூடியிருக்கும் பன்னாட்டு உறுப்பினர்கள்
மேற்கொள்ளும் விவாதங்களும், எடுக்கும் முடிவுகளும் மனிதகுலம் முழுவதையும், குறிப்பாக,
வறியோர் மற்றும் அடுத்தத் தலைமுறையினரை வெகுவாகப் பாதிக்கும் என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். டிசம்பர் முதல் தேதி ஆரம்பமாகி, 12ம் தேதி, இவ்வெள்ளி முடிய தென்
அமெரிக்காவின் பெரு நாட்டுத் தலைநகர் லீமாவில் நடைபெற்றுவரும் சுற்றுச்சூழல் உலக உச்சிமாநாட்டின்
உறுப்பினர்களுக்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள செய்தியில், சுற்றுச்சூழல்
பாதுகாப்பு குறித்து தன் கருத்துக்களையும், கவலைகளையும் வெளியிட்டுள்ளார். அமெரிக்கா,
ஓசியானியா, ஆசியா ஆகிய நிலப்பகுதிகளை இணைக்கும் கடற்கரையோரம் இந்த உலக உச்சி மாநாடு நிகழ்வதைச்
சுட்டிக்காட்டியத் திருத்தந்தை, சுற்றுச்சூழல் என்பதை அக்கறையோடு அணுகும் கடமை ஒன்றிணைந்த
உலகக் குடும்பத்தைச் சார்ந்தது என்று எடுத்துரைத்தார். ஒருவரை ஒருவர் மதிக்கும் மனப்பாங்கும்,
நீதியும் நிறைந்த கலாச்சாரச் சூழலில், நம் சுற்றுச்சூழல் குறித்த பிரச்சனைகளையும் அணுக
உலகத் தலைவர்களாகிய நீங்கள் அழைக்கப்பட்டுள்ளீர்கள் என்று திருத்தந்தை தன் செய்தியில்
வலியுறுத்திக் கூறினார். "மனிதகுலம் பிழைப்பதற்கு சுற்றுச்சூழல் அடிப்படையாக உள்ளது;
நம் அனைவரையும் பாதிக்கும் நன்னெறி கேள்வி அது" என்ற வார்த்தைகள், திருத்தந்தையின் Twitter
செய்தியாக இவ்வியாழன் வெளியானது.