2014-12-11 16:12:33

திருத்தந்தை பிரான்சிஸ் : இளையோருடன் வாழ்க்கையில் பயணிப்பதே அவர்களுக்கு ஆற்றக்கூடிய பெரும் பணி


டிச.11,2014. இளையோருக்காக பல செயல்களை வரிசையாகச் செய்வதைவிட, அவர்களோடு வாழ்க்கையில் பயணிப்பதே அவர்களுக்கு ஆற்றக்கூடிய பெரும் பணி என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
டிசம்பர் 11, இவ்வியாழன் முதல் 13, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் நடைபெறும் 4வது ஐரோப்பிய இளையோர் மாநாட்டிற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனுப்பியுள்ள வாழ்த்துச் செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
"விவிலிய மகிழ்வுக்குச் சான்றாகும் இளமையானத் திருஅவை - ஐரோப்பாவுடன் இணைந்து நடக்க" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டை, திருப்பீட பொதுநிலையினர் பணி அவை ஏற்பாடு செய்துள்ளது.
ஐரோப்பியக் கண்டத்தில் பல பிரச்சனைகள் இருப்பதுபோல் தோன்றினாலும், இக்கண்டமே கத்தோலிக்கத் திருஅவைக்கு பல்லாயிரம் புனிதர்களை வழங்கியுள்ளது என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது என்று திருத்தந்தை தன் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐரோப்பாவின் இன்றைய இளையோரை, கிறிஸ்துவின் கண்கள் கொண்டு நோக்குவதும், அவர்கள் மனங்களில் நம்பிக்கை விதைகளை ஊன்றுவதும் இளையோருக்கு ஆற்றும் பணியின் முக்கிய நோக்கம் என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எடுத்துரைத்தார்.
குடும்பம், அர்ப்பண வாழ்வு என்ற இரு கருத்துக்களை மையப்படுத்தி, அகில உலகக் கத்தோலிக்கத் திருஅவை கொண்டாடிவரும் இவ்வாண்டில், இளையோர் தங்கள் வாழ்வைத் தேர்ந்தெடுக்க, இறைவனின் குரலுக்குச் செவிமடுக்கும் ஆற்றலை அவர்களில் வளர்ப்பது நம் கடமை என்று திருத்தந்தை தன் செய்தியில் வலியுறுத்தியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.