ஆண்டின் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் விழிப்புணர்வு தினமே
டிச.11,2014. மனித உரிமைகள் குறித்த சமூகத்தின் விழிப்புணர்வு ஒரு நாளைக்கு மட்டும் என
சுருக்கிக்கொள்ளப்பட முடியாதது, ஆண்டின் ஒவ்வொரு நாளும் மனித உரிமைகள் தினம் என்ற எண்ணம்
இருக்கவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். இம்மாதம்
10ம் தேதி சிறப்பிக்கப்பட்ட உலக மனித உரிமைகள் தினத்தையொட்டி செய்தி வெளியிட்ட ஐ.நா.
பொதுச்செயலர், மனித உரிமை என்பது எந்நேரத்திலும், எந்தவிதப் பாகுபாடுமின்றி அனைவருக்கும்
பொதுவானது என்று அதில் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும், எல்லா இடத்திலும், எல்லா
நேரத்திலும் முழு மனித உரிமைகள் உண்டு என்பதை வலியுறுத்தும் நோக்கிலேயே இவ்வாண்டின் மனித
உரிமைகள் தினத்தின் தலைப்பாக 'மனித உரிமைகள் 365' என்பது எடுக்கப்பட்டது எனவும் தன் செய்தியில்
கூறியுள்ளார் ஐ.நா. பொதுச்செயலர் பான் கி மூன். அநீதி, சகிப்பற்றதன்மை, தீவிரவாதம்
ஆகியவைகளுக்கு எதிரான போராட்டத்தைப் பலப்படுத்தும்போது, நம்மால் போர்க் குற்றங்களையும்,
சமூக வன்முறைகளையும் தடுக்க முடியும் எனவும் கூறுகிறது ஐ.நா. பொதுச்செயலரின் செய்தி.