மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உலகினர்க்கு ஐ.நா. அழைப்பு
டிச.05,2014. நலமான மண்வளம் இன்றி நலமான வாழ்வு இல்லை என்பதால், மனிதரால் மறக்கப்பட்ட,
அதேநேரம் மிக முக்கியமான மண்வளத்தைப் பாதுகாப்பதற்கு உலகினர் அனைவரும் உறுதி எடுக்குமாறு,
அழைப்புவிடுத்துள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன். டிசம்பர் 05, இவ்வெள்ளியன்று
கடைப்பிடிக்கப்பட்ட முதல் உலக மண் தினத்திற்கென வெளியிட்டுள்ள செய்தியில் இவ்வாறு அழைப்புவிடுத்துள்ள
பான் கி மூன் அவர்கள், புதுப்பிக்கப்பட முடியாத இயற்கை வளமான மண்ணை நன்றாக நிர்வகிப்பதற்கு
அனைவரும் முன்னுரிமை கொடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார். கார்பனைப் பெருமளவில் கொண்டிருக்கும்
மண், விவசாயத்துக்கும், வெப்பநிலை மாற்றத்தை ஏற்பதற்கும் இன்றியமையாததாக உள்ளது என்றும்
கூறியுள்ள பான் கி மூன் அவர்கள், தண்ணீர்ப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள இக்காலத்தில் அதனைச்
சேமித்து வைப்பதில் மண்கள் அடிப்படையாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆண்டுதோறும்
டிசம்பர் 5ம் தேதியன்று உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென்று, 2013ம் ஆண்டு டிசம்பர்
20ம் தேதியன்று ஐ.நா.பொது அவையின் 68வது அமர்வில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி இவ்வெள்ளியன்று
முதல் உலக மண் தினம் கடைப்பிடிக்கப்பட்டது. அதோடு, 2015ம் ஆண்டை அனைத்துலக மண்கள் ஆண்டாகச்
சிறப்பிக்கவும் ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.