சனநாயகத்தை நிலைநாட்டுவதற்காகச் சிறைக்குச் செல்லவும் 82 வயது கர்தினால் Zen தயார்
டிச.05,2014. ஹாங்காங்கில் சனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கு, தான் சிறைக்குச் செல்வதற்கும்
தயார் என்று கூறியுள்ளார் ஹாங்காங்கின் 82 வயது கர்தினால் Joseph Zen. ஹாங்காங்கில்
சனநாயக ஆதரவுப் போராட்டங்களில் பல மாதங்களாக ஈடுபட்டிருந்த சனநாயக ஆதரவு இயக்கத் தலைவர்களில்
ஒருவர் காவல்துறையிடம் தன்னை ஒப்படைக்க முன்வந்ததையடுத்து இவ்வாறு தனது நிலைப்பாட்டை
விளக்கியுள்ளார் கர்தினால் Zen. தான் சிறைக்குச் செல்வது, ஹாங்காங்கின் நியாயமற்ற
அமைப்புமுறைக்கு உண்மையான மற்றும் வலுவான சான்றாக இருக்கும் என்று, ஹாங்காங்கின் ஓய்வுபெற்ற
கர்தினால் Zen கூறியுள்ளார். ஹாங்காங்கில் சனநாயக ஆதரவு இயக்கத்தை ஆரம்பித்த Benny
Tai, Chan Kin-man, பாஸ்டர் Chu Yiu-ming ஆகியோருடன் 82 வயது கர்தினால் Joseph Zen அவர்களும்
டிசம்பர் 3, இப்புதனன்று காவல்நிலையம் சென்றார். ஆயினும் இவர்கள்மீது எவ்விதக் குற்றமும்
பதிவுசெய்யப்படாமல் திருப்பி அனுப்பப்பட்டனர். ஹாங்காங்கில் 2017ம் ஆண்டில் நடைபெறவுள்ள
தேர்தலையொட்டி கடந்த செப்டம்பர் இறுதியிலிருந்து சனநாயக ஆதரவுப் போராட்டங்கள் இடம்பெற்று
வருகின்றன.