2014-12-02 15:47:58

நவீன அடிமைமுறைகளை ஒழிப்பதற்கு உலகினர் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுமாறு ஐ.நா. வேண்டுகோள்


டிச.02,2014. கட்டாயத் தொழில்முறை உள்ளிட்ட அனைத்துவிதமான நவீன இக்கால அடிமைமுறைகளை ஒழிப்பதற்கு உலக அரசுகளும் பொதுமக்கள் சமுதாயமும் தனியார் நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொண்டார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.
டிசம்பர் 02, இச்செவ்வாயன்று கடைப்பிடிக்கப்பட்ட உலக அடிமைமுறை ஒழிப்பு தினத்திற்கென செய்தி வெளியிட்ட பான் கி மூன் அவர்கள், அடிமைமுறை நமது பொதுவான சமுதாயத்துக்கு இகழ்ச்சி என்று, 19ம் நூற்றாண்டில் அனைத்துலக சமுதாயம் ஒன்றிணைந்துவந்து அறிக்கையிட்டது எனக் கூறியுள்ளார்.
இன்று உலகில் ஒரு கோடியே எண்பது இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் கொத்தடிமைகளாக வாழ்கின்றனர் என்றும், சிறார் உரிமைகள் பாதுகாப்பு ஒப்பந்தம் அமலுக்குவந்து 25 ஆண்டுகள் ஆகிய பின்னரும் பல சிறுவர்களும் சிறுமிகளும் அதிர்ச்சியூட்டும் சூழல்களில் வேலை செய்கின்றனர் என்றும் அச்செய்தி கூறுகிறது.
சிறார் கொத்தடிமை முறைக்கு எதிராக, தனது வாழ்வு முழுவதும் போராடிவரும், இவ்வாண்டு நொபெல் அமைதி விருது பெற்ற கைலாஷ் சத்யார்த்தி போன்றவர்கள், இந்த அடிமை முறைகள் ஒழிக்கப்படும் என்பதற்கு நம்பிக்கையூட்டுகின்றார்கள் என்றும் பான் கி மூன் தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
நவீன அடிமைகளில் 61 விழுக்காட்டினர் இந்தியா, பாகிஸ்தான், சீனா, இரஷ்யா, உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளில் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.

ஆதாரம் : UN







All the contents on this site are copyrighted ©.