திருத்தந்தை : இறைவன் தாழ்மையான இதயத்துக்கே அதிகம் வெளிப்படுத்துகிறார்
டிச.02,2014. குழந்தை போன்ற இதயத்தைக் கொண்டவர்கள், எளிய உள்ளத்தோர் மட்டுமே இறைவனின்
வெளிப்பாடுகளை முழுமையாக புரிந்துகொள்ள இயலும் என்று இச்செவ்வாயன்று கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ். இறைவனின் பேருண்மைகளைக் கற்பவர்கள் அவரின் முன்னர் அடிபணிய வேண்டும்,
ஏனெனில் தாழ்மையான இதயத்துக்கே இறைவன் தம்மை அதிகம் வெளிப்படுத்துகிறார் என்றும், ஏழ்மை
சலுகைபெற்ற ஒரு கொடை, அது இறைவனின் பேருண்மைகளுக்குக் கதவுகளைத் திறக்கின்றது என்றும்
கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ். வத்திக்கான் சாந்தா மார்த்தா இல்லச் சிற்றாலயத்தில்
இச்செவ்வாய் காலை நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றிய திருத்தந்தை, ஏழைகளின் கண்கள்
பெரும்பாலும் கிறிஸ்துவைப் பார்க்கின்றன, அவர் வழியாக இறைவனின் முகத்தைக் காண்கின்றன
எனவும் கூறினார். தங்கள் அறிவின் வளங்களை வைத்து இறைவனின் பேருண்மையை அறிய விழையும்
மற்றவர்கள், தாழ்மையான எண்ணத்துடன் இறைவன்முன் பணிய வேண்டும், இல்லாவிடில் அவர்கள் எதையும்
புரிந்து கொள்ளமாட்டார்கள் என்றும் கூறினார் திருத்தந்தை. இயேசு தமது தந்தையைப் போற்றி
நன்றி கூறியது பற்றிய இந்நாளைய லூக்கா நற்செய்தி வாசகத்தை(லூக்.10,20-24) மையமாக வைத்து
மறையுரையாற்றிய திருத்தந்தை, பலர் இறையியலை, அறிவியலை நன்றாக அறிந்திருக்கலாம், ஆனால்
அவர்கள் தாழ்ச்சியாய் இருப்பதை அறிந்திருக்கவில்லை என்றும், தாழ்மையான இதயம் கொண்ட, செபத்தின்
தேவையை உணருகின்றவர்கள் இறைவனின் வெளிப்பாட்டைப் பெறுவார்கள் என்றும் கூறினார். இறைவனின்
பேருண்மைக்கு நெருக்கமாகவும், அவர் விரும்பும் தாழ்மையான, ஏழ்மையான வழியிலும் நாம் செல்வதற்கு
இந்த திருவருகை காலத்தில் ஆண்டவரிடம் அருள் வேண்டுவோம் என்றும் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.