2014-12-01 16:21:40

திருத்தந்தை : இளையோர் தங்கள் நம்பிக்கையின் காரணங்களைக் கண்டுகொள்ள உதவுங்கள்


டிச.01,2014. சுவிட்சர்லாந்து நாட்டில் பெரும்பான்மை மக்கள் திருஅவை நடவடிக்கைகளில் அதிகம் பங்கெடுப்பதில்லை எனினும், கிறிஸ்தவர்களின் சமூகப்பங்களிப்பை அவர்கள் முழுமனதுடன் அங்கீகரிக்கிறார்கள் என சுவிட்சர்லாந்து ஆயர்களிடம் கூறினார் திருத்தந்தை பிரான்சிஸ்.
ஐந்து ஆண்டிற்கு ஒருமுறை இடம்பெறும் அத் லிமினா சந்திப்பையொட்டி உரோம் நகர் வந்திருந்த சுவிட்சர்லாந்து ஆயர்களை இத்திங்களன்று காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அமைதி, கலாச்சாரம் மற்றும் மத ஒன்றிப்பில் வாழும் அந்நாட்டில், அமைதி, தொழில், அறிவியல் மற்றும் கிறிஸ்தவ ஒன்றிப்புத் தொடர்புடைய பல பன்னாட்டு அமைப்புகள் செயலாற்றுவதைச் சுட்டிக்காட்டிப் பாராட்டினார்.
நீண்டகால கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்ட சுவிட்சர்லாந்து நாட்டில், புனித மௌரிஸ் துறவுமடத்தின் 1500ம் ஆண்டுக் கொண்டாட்டங்கள், வரும் ஆண்டில் இடம்பெற உள்ளதையும் எடுத்துரைத்து, இளையோர் தங்கள் நம்பிக்கை மற்றும் விசுவாசத்திற்கான காரணங்களைக் கண்டுகொள்ளவேண்டும் என ஆயர்களிடம் விண்ணப்பித்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.
அருள்பணியாளர்கள் பணிக்கென தங்களைத் தயாரிக்கும் மாணவர்களின் பயிற்சியில் சிறப்புக் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்திய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைமாவட்டங்களில் அருள்பணியாளர்களுக்கும் பொதுநிலையினருக்கும் இடையே, நல்லுறவு வளர்க்கப்படவேண்டியதையும் கோடிட்டுக்காட்டினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.