திருத்தந்தை : நற்செய்தியின் மகிழ்வை உணர்ந்தவர்களாலேயே அச்செய்தியை மகிழ்வுடன் அறிக்கையிட
முடியும்
நவ.27,2014. "கொடையாகப் பெற்றீர்கள்; கொடையாகவே வழங்குங்கள்" (மத். 10,8) என்று இயேசு
கூறியது, நமது நற்செய்திப் பரப்புப் பணியின் அடித்தளமாக அமைகிறது என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறினார். நற்செய்தி பரப்புதல், ஊடகத் துறையில் பணியாற்றுதல் ஆகிய சிறப்புக்
கொடைகளை தங்கள் துறவற வாழ்வின் நோக்கங்களாகக் கொண்டு உலகெங்கும் பணியாற்றும் புனித பவுல்
துறவுச் சபையின் 7000த்திற்கும் அதிகமான உறுப்பினர்களை, திருத்தந்தை முத்திப்பேறு பெற்ற
6ம் பால் அரங்கத்தில் இவ்வியாழனன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்தபோது இவ்வாறு
கூறினார். நற்செய்தியின் மகிழ்வை உணர்ந்தவர்களாலேயே அச்செய்தியை மகிழ்வுடன் அறிக்கையிட
முடியும்; உண்மையில் பார்த்தோமெனில், நமது நன்மைத்தனம் தானாகவே வெளிப்படும், அதனை நாம்
அறிக்கையிடத் தேவையில்லை என்று திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார். முத்திப்பேறு
பெற்ற James Alberione அவர்கள், "நற்செய்தியை நான் அறிவிக்காவிடில் ஐயோ எனக்குக் கேடு"
(1கொரிந்தியர் 9,16) என்று வாழ்ந்த திருத்தூதர் பவுலைப் பின்பற்றி, தான் வாழ்ந்த காலத்திற்கேற்ற
வழியில் நற்செய்தியைப் பரப்பத் துணிந்து, புனித பவுல் துறவுச் சபையை உருவாக்கினார் என்று
திருத்தந்தை தன் உரையில் எடுத்துரைத்தார். முத்திப்பேறு பெற்ற James Alberione அவர்களால்
1914ம் ஆண்டு நிறுவப்பட்ட இச்சபை, 2014ம் ஆண்டு தன் முதல் நூற்றாண்டைச் சிறப்பித்து வந்தது.
இந்த நூற்றாண்டு கொண்டாட்டங்களின் இறுதி நிகழ்வாக, இத்துறவுச் சபையைச் சார்ந்தவர்கள்
திருத்தந்தையைச் சந்தித்து, அவரது ஆசீரைப் பெற்றுச் சென்றனர்.