2014-11-27 15:52:06

திருத்தந்தை : இறைவனின் அரசை முன்னெடுத்துச் செல்ல, பழைய தோல்பைகளை விட்டு விலக நாம் அஞ்சக்கூடாது


நவ.27,2014. இறைவனின் அரசை முன்னெடுத்துச் செல்ல, பழைய தோல்பைகளை விட்டு விலக நாம் அஞ்சக்கூடாது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டு, நவம்பர் 30ம் தேதி, வருகிற ஞாயிறன்று துவங்கவிருக்கும் வேளையில், அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு நிறுவனங்கள், மற்றும் திருத்தூது வாழ்வு அவைகள் ஆகிய அமைப்பினருக்கெனப் பணியாற்றும் துறவியர் திருப்பேராயம், நவம்பர் 25 இச்செவ்வாய் முதல், 29, இச்சனிக்கிழமை முடிய உரோம் நகரில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கூட்டத்தில் பங்கேற்றுவரும் உறுப்பினர்களை இவ்வியாழன் காலை திருப்பீடத்தில் சந்தித்து உரை வழங்கியத் திருத்தந்தை, "புதிய மது, புதுத் தோல்பைகள்" என்ற விவிலியச் சொற்றொடரை இக்கூட்டத்தின் மையக் கருத்தாக அவர்கள் எடுத்துக்கொண்டதைப் பாராட்டினார்.
கிறிஸ்துவின் திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற தங்களையே அர்ப்பணித்துள்ள துறவியரும், திருத்தூது பணியாளரும், புதியத் திராட்சைக் கனிகளாக பழுத்து, புது மதுவாக மாறியுள்ளனர் என்று தன் உரையில் குறிப்பிட்டார், திருத்தந்தை.
மாற்றங்களுக்கு இடம்தர மறுக்கும் பழமைப் போக்கு, எண்ணிக்கையில் குறைந்து வரும் இருபால் துறவியர் ஆகிய சவால்களை, அர்பணிக்கப்பட்ட வாழ்வில் ஈடுபடுவோர் சந்தித்தாலும், தொடர்ந்து இறையரசை புதுவழிகளில் விரிவாக்க அவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று திருத்தந்தை எடுத்துரைத்தார்.
புது மது, புது தோல்பை இரண்டும், நற்செய்தியில் தங்கள் வேர்களை பதித்துள்ளனவா என்பதை ஆய்வு செய்து, தெரிவு செய்யும் கடமை உள்ளது என்று திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
தன் திராட்சைத் தோட்டத்தில் பணியாற்ற உங்களை அழைத்துள்ள இறைவனின் கருணைக்கு என்றும் நன்றி கூறுங்கள் என்று கூறியத் திருத்தந்தை, உலக அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வு ஆண்டின் துவக்கத்தில் இக்கூட்டத்தில் ஈடுபட்டுள்ள அனைவரும், அன்னைமரியாவின் பரிந்துரையால் இறையாசீர் பெறவேண்டுமென்ற வாழ்த்துடன் திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.