2014-11-27 15:52:57

கர்தினால் பரோலின் : கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமையை வளர்க்க திருத்தந்தை துருக்கி செல்கிறார்


நவ.27,2014. கத்தோலிக்க, ஆர்த்தடாக்ஸ் திருஅவைகளுக்கு இடையே உள்ள உறவை வலுப்படுத்தவும், கிறிஸ்தவ சபைகளுக்குள் ஒற்றுமையையும், உரையாடலையும் வளர்க்கவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் துருக்கி நாட்டுக்கு திருப்பயணம் மேற்கொள்கிறார் என்று திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் கூறினார்.
நவம்பர் 28, இவ்வெள்ளி முதல் 30 இஞ்ஞாயிறு முடிய துருக்கி நாட்டில் திருத்தந்தை மேற்கொள்ளவிருக்கும் திருப்பயணம் குறித்து, வத்திக்கான் தொலைக்காட்சி நிலையத்திற்கு கர்தினால் பரோலின் அவர்கள் அளித்த பேட்டியில் இவ்வாறு கூறினார்.
கிறிஸ்தவ ஒன்றிப்பு என்பது, இப்பயணத்தின் முக்கியக் குறிக்கோளாக இருப்பினும், அந்நாட்டில், துன்புறும் கிறிஸ்தவர்களுக்கு ஆறுதல் தருவதும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பயணத்தை மேற்கொள்ள ஒரு முக்கிய காரணம் என்று கர்தினால் பரோலின் அவர்கள் எடுத்துரைத்தார்.
இஸ்லாமியரோடு மேற்கொள்ளக்கூடிய உரையாடலுக்கு, துருக்கி நாட்டில் வாழும் கிறிஸ்தவர்களே ஒரு பாலமாக அமைவர் என்றும் கர்தினால் பரோலின் அவர்கள் நம்பிக்கை தெரிவித்தார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளும் 6வது திருப்பயணம், நவம்பர் 30, புனித அந்திரேயா அவர்களின் திருநாளன்று நிறைவுபெறும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி







All the contents on this site are copyrighted ©.