2014-11-18 14:51:59

விவிலியத்
தேடல் மன்னிக்க மறுத்த பணியாள் உவமை பகுதி - 2


RealAudioMP3 சில ஆண்டுகளுக்கு முன் பார்த்த தமிழ் திரைப்படம் ஒன்றை நினைத்துப் பார்க்கிறேன். என்ன படம் என்பது தேவையில்லை. ஏறத்தாழ எல்லாத் தமிழ் திரைப்படங்களிலும் வரும் கதைதான். சமுதாயத்திற்கெதிராகத் தீமைகள் செய்யும் வில்லன்களை, தனி ஆளாய்த் தீர்த்துக்கட்டும் ஹீரோ, இந்தத் திரைப்படத்திலும் காட்டப்பட்டார். அண்மைய ஆண்டுகளில், நமது நாயகர்கள் ஏதாவது ஒரு வசனத்தை, அல்லது, ஒரு செய்கையை, திரைப்படம் முழுவதும் அடிக்கடிச் சொல்வார்கள், செய்வார்கள். மக்களின் ஆரவாரக் கைத்தட்டலைப் பெறுவார்கள்.
அதேபோல், இந்தத் திரைப்படத்திலும் நடந்தது. தீமை செய்பவர்களை ஹீரோ சந்திப்பார். அடித்து நொறுக்குவார். அவரது அடிகளைத் தாங்கமுடியாமல் அவர்கள் மன்னிப்பு கேட்பார்கள். உடனே அவர், "மன்னிப்பு... எனக்குப் பிடிக்காத ஒரு வார்த்தை." என்று சொல்வார். இப்படி சொல்லிவிட்டு, மன்னிப்பு கேட்டவர்களைத் தீர்த்துக்கட்டுவார். திரை அரங்கில் விசிலும், கைத்தட்டலும் ஒலிக்கும். நீதி, நியாயம் என்ற பெயரில் நம் திரைப்படங்களில் வன்முறைகளை சர்வ சாதாரணமாக செய்யும் நம் நாயகர்களுக்கு மன்னிப்பு என்ற வார்த்தை பிடிக்காது. மன்னிப்பு என்ற வார்த்தை அவர்கள் அகராதியிலேயே கிடையாது என்றும் ஒரு சில நாயகர்கள் வசனம் பேசியிருக்கிறார்கள்.

நம் திரைப்பட நாயகர்களுக்கு இணையான ஒருவரை மையப்படுத்தி இயேசு கூறிய உவமை - மன்னிக்க மறுத்த பணியாள் உவமை (மத்தேயு 18: 21-35). இயேசு இந்த உவமையைச் சொல்வதற்குத் தூண்டுதலாக அமைந்தது, பேதுரு கேட்ட கேள்வி. தனக்கு எதிராகப் பாவம் செய்யும் சகோதரர், சகோதரியை "எத்தனை முறை மன்னிப்பது, ஏழு முறை மட்டுமா?" என்று பேதுரு கேள்வி எழுப்பினார். எப்போதும் மன்னிக்கவேண்டும்; மன்னிப்பு என்பது, நம் சுவாசத்தைப் போல, நம் இயல்பாக, உயிரூட்டும் சக்தியாக மாறவேண்டும் என்ற உண்மையை வலியுறுத்தும்வண்ணம், இயேசு, "ஏழுமுறை மட்டுமல்ல; எழுபது தடவை ஏழுமுறை" என்று பதில் அளித்தார். இதே கருத்தை இயேசு, லூக்கா நற்செய்தியில் மற்றொரு வகையில் கூறியுள்ளார்:
லூக்கா நற்செய்தி 17: 3-4
அக்காலத்தில் இயேசு கூறியது: உங்களுடைய சகோதரர் சகோதரிகளுள் ஒருவர் பாவம் செய்தால் அவரைக் கடிந்துகொள்ளுங்கள். அவர் மனம் மாறினால் அவரை மன்னியுங்கள். ஒரே நாளில் அவர் ஏழு முறை உங்களுக்கு எதிராகப் பாவம் செய்து ஏழு முறையும் உங்களிடம் திரும்பி வந்து, ‘நான் மனம் மாறிவிட்டேன் என்று சொல்வாரானால் அவரை மன்னித்து விடுங்கள்.

மன்னிப்பு தனக்குப் பிடிக்காத வார்த்தை என்றும், பழிக்குப் பழி தனக்குப் பிடித்த செயல் என்றும் நமது நாயகர்கள் திரைப்படங்களில் பறைசாற்றும் காட்சிகளுக்கு நேர் மாறான ஒரு நிகழ்ச்சி அன்று கல்வாரியில் நடந்தது. விடுகின்ற ஒவ்வொரு மூச்சுக்கும் சிலுவையில் மரண போராட்டம் நடத்திவந்த இயேசு, தனக்கு மிகவும் பிடித்த ஒரு சொல், தன் இயல்பாகவே மாறிவிட்ட ஒரு செயல், மன்னிப்பு என்பதை நிரூபித்தார். தன்னை மூன்று நாட்களாய் பல வகையிலும் சித்ரவதை செய்தது போதாதென்று, சிலுவையில் அறைந்தபின்னும் தன்னைச் சுற்றி நின்று கேலி செய்து கொண்டிருந்த உரோமைய வீரர்களையும், அவர்களுக்குப் பின்புலமாய் இருந்து அவர்களைத் தூண்டிய அரசுத் தலைவர்களையும், மதத் தலைவர்களையும் இயேசு மனதார மன்னித்தார். இறைவனும், அவர்களை மன்னித்து, காக்க வேண்டுமென வேண்டிக்கொண்டார். 'தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை' (லூக்கா 23:34) என்று சொன்னார். மிருகங்களாய் மாறிவிட்ட மனிதர்களைப் பழிவாங்க, நமது திரைப்பட நாயகர்கள், மிருகங்களாய் மாறுவர். இயேசுவோ, மிருகங்களாய் மாறி தன்னை வதைத்த மனிதர்களை, மீண்டும் மனிதர்களாய் மாற்ற சிலுவையில் மன்றாடியபோது, தெய்வமாக மாறினார்.

எந்த ஒரு மனிதரும் மிருகமாகவோ, மனிதராகவோ, புனிதராகவோ, தெய்வமாகவோ வளர அவரது பிறப்பு, வளர்ப்பு இன்னும் பல காரணங்கள் உள்ளன. சிறு வயதில் கற்றுக்கொள்ளும் பாடங்கள் இறுதி வரை ஒருவரின் வாழ்வை உருவாக்கும், மாற்றும் என்பது நமக்குத் தெரிந்த உண்மைகள். இயேசுவின் வாழ்க்கையைக் கொஞ்சம் சிந்திப்போம். அவர் சிறு வயது முதல் உரோமைய அராஜகத்தைப் பல வழிகளிலும் பார்த்து வளர்ந்தவர். அந்த அராஜகத்தை ஒழிக்க, அந்த அராஜகத்தை வெல்ல, அவரும் ஆசைபட்டிருப்பார். ஒன்றை வெல்வதற்கு அதைக் கொல்ல வேண்டுமென்று கட்டாயம் இல்லையே. வேறு வழிகள் உள்ளனவே. அவற்றில் மிகவும் உன்னதமான வழி அன்பு வழி. அன்பினால் எதையும் வெல்ல முடியும் என்பதைத்தான் இயேசு தன் வாழ்வில், சிறப்பாக சிலுவை மரணத்தில் நிரூபித்தார்.

அன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை பேணி வளர்க்கும் நாற்றங்காலாய் இருப்பது குடும்பங்கள். சிறு வயது முதல் அன்பு, பாசம், மன்னிப்பு என்ற உன்னத உணர்வுகளை இயேசுவுக்குப் போதித்து, அவருக்கு வழிகாட்டி வாழ்ந்து வந்த மரியா, யோசேப்பு இருவரையும் நாம் நன்றியோடு நினைத்துப் பார்க்க வேண்டும். அவர்கள் சொல்லித்தந்தவைகளும், அவர்கள் வாழ்ந்த விதமும் இயேசுவை ஓரளவாகிலும் உருவாக்கியிருக்க வேண்டும். குழந்தை இயேசுவுக்கு, சிறுவன் இயேசுவுக்கு அந்த பெற்றோர் மன்னிப்பை, ஊட்டி வளர்த்திருக்க வேண்டும். இப்படி ஓர் அன்புச் சூழலில் அவர் வளர்ந்து வந்ததால், அவரால் ஒரு பரந்த மனம், பரந்த பார்வை இவற்றைப் பெற முடிந்தது.

பிறந்தது முதல் பல கொடுமைகளுக்கு ஆளாகி, அதனால் மனம், உடல் அனைத்தும் கசப்பில், வெறுப்பில் தோய்ந்திருக்கும் குடும்பங்களை, குறிப்பாக, அத்தகையச் சூழலில் வளரும் குழந்தைகளை எண்ணிப் பார்ப்போம், அவர்களுக்காக வேண்டுவோம். கசப்பும், வெறுப்பும் சூழ்ந்த கடலில் மூழ்கியிருக்கும் இக்குடும்பங்களில் மன்னிப்பு என்ற முத்துக்களும் தோன்றுகின்றன. மரணம் என்ற பேரிழப்பையும் தாண்டி, அன்பும், மன்னிப்பும் வாழ முடியும் என்பதை கல்வாரியில் உணர்த்திய இயேசுவைப் போல், நாம் வாழும் 21ம் நூற்றாண்டில் பலர் நமக்கு உணர்த்தி வருகின்றனர். அவர்களில், பாலஸ்தீனிய நாட்டில் வாழும் ஓர் ஏழை தம்பதியர் என் நினைவை இப்போது நிறைக்கின்றனர்.

2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம், இரமதான் பண்டிகை காலத்தில், Ahmed Khatib என்ற பாலஸ்தீனிய சிறுவன் ஒருவன், இஸ்ரேல் வீரர்களால் சுட்டுக் கொல்லப்பட்டான். அவன் வைத்து விளையாடிக் கொண்டிருந்த பொம்மை துப்பாக்கியை உண்மைத் துப்பாக்கி என்று நினைத்த இஸ்ரேல் வீரர்கள் Ahmed ஐச் சுட்டனர்.
வீரர்கள் தங்கள் தவறை உணர்ந்ததும், உடனே அச்சிறுவனை இஸ்ரேல் பகுதியில் இருந்த ஒரு மருத்துவ மனைக்கு எடுத்துச்சென்றனர். அவனது பெற்றோரையும் அழைத்துச் சென்றனர். Ahmedஐக் காப்பாற்ற முடியவில்லை. அந்நேரத்தில் அந்தத் தாயும், தந்தையும் அற்புதம் ஒன்றைச் செய்தனர். அவர்கள் இருவரும் Ahmedன் உடல் உறுப்புகளைத் தானம் செய்ய முன் வந்தனர். அவர்கள் அந்த உறுப்பு தானத்தை இஸ்ரேல் பகுதியில் இருந்த மருத்துவமனையிலேயே செய்ததைக் கேள்விப்பட்ட பாலஸ்தீனியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பலர் கோபமடைந்தனர். ஆனால், கட்டாயம் வேறு பல பாலஸ்தீனியர்கள் மகிழ்ந்திருப்பர். தங்கள் மகனைக் கொன்றது இஸ்ரேல் படை என்று தெரிந்தும், அந்தப் பகுதியிலேயே தங்கள் மகனின் உறுப்புக்களை அவர்கள் தானம் செய்தது மன்னிப்பின் சிகரம்!
Ishmael, Ablah என்ற அந்த பெற்றோர் எளிய மக்கள். Ishamael அவர்கள், இரு சக்கர வாகனங்களைப் பழுதுபார்க்கும் ஒரு மெக்கானிக். அந்தப் பெற்றோரின் இந்தச் செயலைப் பற்றி பத்திரிக்கையாளர்கள் கேட்டபோது, Ishmael சொன்னது இதுதான்: "என் மகனின் உறுப்புக்கள் வழியே வாழப்போகும் இஸ்ரேல் மக்கள் இனிமேலாகிலும் சமாதானத்தை விரும்புவார்கள் என்ற நம்பிக்கையில் தான் இந்த உறுப்புகளை நாங்கள் தானம் செய்தோம்." அந்தப் பெற்றோரை இஸ்ரேல், பாலஸ்தீனிய அரசுகள் பாராட்டின. பல தீவிரவாத குழுக்களும் பாராட்டின. அரசுகளும், தீவிரவாத குழுக்களும் கொண்டு வர முயன்றும் முடியாத பாலஸ்தீனிய இஸ்ரேல் ஒப்புரவை, ஓர் எளிய மெக்கானிக் குடும்பம், ஒரு சிறிய அளவில் கொண்டுவந்தது என்பது, மறுக்கமுடியாத உண்மை.

இது போன்ற ஆயிரமாயிரம் சம்பவங்கள் நடக்கின்றன. இனியும் நடக்கும். நம் வாழ்விலும் மன்னிப்பை தந்த நேரங்கள், பெற்ற நேரங்கள் அப்போது நாம் அடைந்த அந்த நிம்மதி, நிறைவு இவற்றைச் சிந்திப்போம்.
அவ்வப்போது நடந்துவரும் இந்த அற்புதங்களை ஒவ்வொரு நாளும் நாம் நடத்தினால்,
ஒவ்வொரு நொடியும் நடத்தினால்,
மன்னிப்பு மழையில் இந்த உலகம் நனைந்தால்...
மன்னிப்பது சுவாசிப்பதைப் போல் நம் ஒவ்வொருவருக்கும் நம் இயல்பாகவே மாறிவிட்டால்...
ஹூம்... இவையெல்லாம் அழகான கனவுகள் என்று ஏக்கப் பெருமூச்சு விடவேண்டாம். நாம் நினைத்தால் இந்தக் கனவுகளை நனவாக்க முடியும். நாம் மனது வைத்தால், 'எழுபது தடவை ஏழுமுறை' என்பது நம் மன்னிப்பு மந்திரமாக மாறமுடியும்.








All the contents on this site are copyrighted ©.