2014-11-18 15:38:29

திருத்தந்தையுடன் செனகல் நாட்டு அரசுத்தலைவர் சந்திப்பு


நவ.18,2014. செனகல் நாட்டு அரசுத்தலைவர், Macky Sall அவர்கள், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களை, இச்செவ்வாய் காலை திருப்பீடத்தில் சந்தித்துப் பேசினார்.
செனகல் நாட்டுக்கும், வத்திக்கானுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகள் குறித்தும், செனகல் நாட்டில் தலத்திருஅவை, கல்வி, நல்வாழ்வு ஆகிய துறைகளில் ஆற்றிவரும் பணிகள் குறித்தும் இச்சந்திப்பில் பேசப்பட்டதென, திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியது.
செனகல் நாட்டில் ஒப்புரவை வளர்க்க, தலத்திருஅவை மேற்கொண்டுவரும் முயற்சிகள் குறித்து இச்சந்திப்பின்போது பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டதாகவும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் கூறியுள்ளது.
திருத்தந்தையைச் சந்தித்தபின், செனகல் நாட்டு அரசுத் தலைவர், Macky Sall அவர்கள், திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரொ பரோலின் அவர்களையும், நாடுகளுடன் தொடர்பு கொள்ளும் திருப்பீடத் துறையின் தலைவர், பேராயர் தோமினிக் மம்பெர்த்தி அவர்களையும் சந்தித்து உரையாடினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.