குறைமாதப் பிரசவம் : குழந்தைகள் உயிரிழப்புக்குப் பெரிய காரணம்
நவ.18,2014. உலகெங்கிலும் சிறார் உயிரிழப்புகளுக்கு, குறைமாத பிரசவமே மிகப்பெரிய காரணியாக
உள்ளதாக பிரிட்டன் மருத்துவர்கள் நடத்திய ஆய்வொன்றில் தெரியவந்துள்ளது. ‘த லான்செட்’
(The Lancet) மருத்துவ இதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வறிக்கையின்படி, ஓராண்டில் மட்டும்
ஏறத்தாழ 10 இலட்சம் உயிரிழப்புகளுக்கு குறைமாத பிறப்புகளே காரணமாகியுள்ளன. குறைமாதத்தில்
பிறந்த பின்னர் ஏற்படும் உடல் நலப் பாதிப்புகளினால் இறக்கும் குழந்தைகள் எண்ணிக்கை அடிப்படையில்
அதிக உயிரிழப்பை சந்திக்கும் நாடு இந்தியா என உலக நலவாழ்வு நிறுவனம் கூறுகிறது. இந்தியாவில்
ஓர் ஆண்டில் சுமார் 3.61,000 குழந்தைகள் குறைமாதப் பிரசவத்தின் பின்னர் ஏற்படும் உடல்
நலப் பாதிப்பால் உயிரிழக்கின்றன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மிகவும் முன்கூட்டியே
பிறக்கும் குழந்தைகளுக்கு நுரையீரல், மூளை உள்ளிட்ட உள்ளுறுப்புகள் சரியாக வளர்ச்சியடைந்திருக்காத
காரணத்தினால் உயிரிழப்புக்கான வாய்ப்பு அதிகளவில் உள்ளது. ஒருகாலத்தில் நிமோனியா போன்ற
கிருமித் தொற்றுநோய்களால் இடம்பெற்ற குழந்தைகால உயிரிழப்புகளைவிட, தற்போது முதற்தடவையாக,
குழந்தை பிறந்தவுடன் ஏற்படக்கூடிய சிக்கல்கள், கூடுதலான உயிரிழப்புகளுக்கு காரணமாகியுள்ளதாக
மருத்துவ ஆய்வு கூறுகிறது.