2014-11-13 16:10:19

"போர் அழிக்கிறது, கொல்கிறது, வறுமைப்படுத்துகிறது!" - திருத்தந்தையின் Twitter செய்தி


நவ.13,2014. "போர் அழிக்கிறது, கொல்கிறது, வறுமைப்படுத்துகிறது. ஆண்டவரே, எங்களுக்கு அமைதியை வழங்கியருளும்!" என்ற வார்த்தைகளை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தன் Twitter செய்தியாக இவ்வியாழன் வெளியிட்டார்.
மேலும், நவம்பர் 12, இப்புதனன்று, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் பொது மறையுரையை வழங்க புனித பேதுரு வளாகத்திற்கு செல்வதற்கு முன்னர், திருத்தந்தை, முத்திப்பேறு பெற்ற 6ம் பால் அரங்கத்தின் ஒரு பகுதியில், கத்தோலிக்கர், இஸ்லாமியர் அடங்கிய ஒரு குழுவினரைச் சந்தித்து, தன் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
"பிறருக்குப் பணியாற்ற நாம் இணைந்து உழைக்கிறோம்" என்ற கருத்துடன், பல்சமய உரையாடல் திருப்பீட அவை, புதன், வியாழன் ஆகிய இரு நாட்கள், உரோம் நகரில், ஏற்பாடு செய்திருந்த ஒரு கருத்தரங்கில் பங்கேற்க வந்திருந்த கத்தோலிக்க, இஸ்லாமிய அறிஞர்கள், கர்தினால் Jean-Louis Tauran அவர்கள் தலைமையில், திருத்தந்தையைச் சந்தித்தனர்.
2008ம் ஆண்டு, "இறையன்பு, பிறரன்பு" என்ற கருத்துடனும், 2011ம் ஆண்டு, "அறிவு, நம்பிக்கை, தனிமனிதர்" என்ற கருத்துடனும் கூடிய இக்கருத்தரங்கு, இவ்வாண்டு மூன்றாம் முறையாகக் கூடியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.