எபோலா நோயைத் தடுக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்கள்
15 இலட்சம் டாலர்கள் நிதி உதவி
நவ.13,2014. எபோலா என்ற உயிர்கொல்லி நோயைத் தடுக்க, அமெரிக்க ஐக்கிய நாட்டு மறைமாவட்டங்களும்,
கத்தோலிக்க பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து, அண்மையில் 15 இலட்சம் டாலர்கள் நிதி உதவியை
வழங்கியுள்ளன. எபோலா நோயால் துன்புறுவோருக்குப் பணியாற்றும் தொண்டர்களின் பாதுகாப்பு,
இந்த நோய் தடுப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள், இன்னும் பல செயல்பாடுகளுக்கு இத்தொகை
அனுப்பப்பட்டுள்ளது என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறுகிறது. Guinea, Sierra Leone,
Liberia ஆகிய நாடுகளில் பெருமளவில் பரவியுள்ள இந்நோயினால், இதுவரை 5,000த்திற்கும் அதிகமானோர்
உயிரிழந்துள்ளனர் என்றும், இன்னும் 13,000த்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவரை இந்த நோயைக் கட்டுப்படுத்தும் மருந்துகள் எதுவும்
கண்டுபிடிக்கப்படாத நிலையில், இது ஓர் உயிர்கொல்லி நோயாக மாறியுள்ளது என்று WHO எனப்படும்
உலக நலவாழ்வு நிறுவனம் கூறியுள்ளது.