உறுதியான எதிர்காலத்தை அமைப்பதில் கல்விக்கு முக்கியத்துவம் அவசியம், ஐ.நா.
நவ.11,2014. இவ்வுலகில், அதிலும் குறிப்பாக, வளர்ந்துவரும் பொருளாதார, சமூக மற்றும் சூற்றுச்சூழல்
சவால்களை எதிர்நோக்கும் இக்காலத்தில், உலகின் உறுதியான எதிர்காலத்துக்கு இளையோரைத் தயாரிப்பதில்
கல்விக்கு முக்கிய பங்கு உள்ளது என்று ஐ.நா. கருத்தரங்கு ஒன்றில் கூறப்பட்டது. யுனெஸ்கோ
என்ற ஐ.நா.வின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார நிறுவனம் ஜப்பானின் Aichi-Nagoya வில்
இத்திங்களன்று தொடங்கிய கல்வி குறித்த உலக கருத்தரங்கில் உரையாற்றிய யுனெஸ்கோ இயக்குனர்
இரினா போக்கோவா அவர்கள் இளையோரின் கல்வி குறித்துப் பேசினார். சிறுவர்களும் சிறுமிகளும்
ஒரு பாதுகாப்பான பொதுவான எதிர்காலத்தில் பொறுப்புடன் செயல்படுவதற்கு அவர்களைத் தயாரிக்க
வேண்டும் மற்றும் அவர்களும் உலகளாவிய குடியுரிமை பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும்
போக்கோவா அவர்கள் கூறினார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரத்துக்கு
அதிகமான பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இந்த மூன்று நாள் கருத்தரங்கு இப்புதனன்று
நிறைவடையும்.