தேவ நிந்தனை என்ற பொய்க்குற்றம் சுமத்தி, பாகிஸ்தானில் இளம் கிறிஸ்தவ
தம்பதியர் உயிரோடு எரிப்பு
நவ.05,2014. பொய்க்குற்றம் சுமத்தி, அப்பாவி மக்கள் இருவரை எரித்துக் கொன்றது, பாகிஸ்தானின்
சட்டத்தை எள்ளி நகையாடும் கொடுமை என்று இஸ்லாமாபாத் - ராவல்பிண்டி ஆயர் ரூபின் அந்தோனி
அவர்கள் கூறினார். தேவ நிந்தனை குற்றம் புரிந்தனர் என்ற பொய்க்குற்றம் சுமத்தி, 28
வயதான Shazad Masih என்பவரும், அவரது மனைவி, 25 வயதான Shama என்பவரும் இச்செவ்வாயன்று
உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டனர். லாகூருக்கு அருகே, Kasur மாவட்டத்தின், Chak என்ற
கிராமத்திற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன் செங்கல் சூளையில் உழைப்பதற்கு, தன் குடும்பத்தோடு
வந்தவர், Shazad. பிழைப்பு தேடி வந்த Shazad அவர்களின் மனைவி, தன் வீட்டிலிருந்த
பழைய காகிதங்களை எரித்தபோது, அதில் திருக்குரானின் பக்கங்கள் இருந்தன என்று யாரோ ஒருவர்
கூறிய ஆதாரமற்ற குற்றச்சாட்டினால் திரண்டு வந்த 300க்கும் அதிகமான மக்கள், Shazad மற்றும்
Shamaவை இழுத்துச் சென்று முதலில் கற்களால் எறிந்தனர் என்றும், இறுதியில் செங்கல் சூளையில்
எரித்துக் கொன்றனர் என்றும் ஆசிய செய்திக்குறிப்பு கூறுகிறது. பாகிஸ்தானின் கறுப்புச்
சட்டம் என்றழைக்கப்படும் தேவ நிந்தனை சட்டத்தால் வன்முறையாளர்கள் நாட்டின் சட்டங்களை
மதிக்காமல் இவ்விதம் தங்கள் விருப்பத்திற்கு கொலைகளைச் செய்வதும், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல்
இருப்பதால் இத்தகைய வன்முறைகள் வளர்வதும் வேதனை தருகிறது என்று லாகூரில் 'அமைதி மையம்'
என்ற அமைப்பை நடத்தி வரும் தொமினிக்கன் துறவி, James Channan அவர்கள் Fides செய்திக்கு
அளித்த பேட்டியொன்றில் கூறினார்.