2014-11-05 16:10:51

திருத்தந்தை - திருஅவையிலிருந்து நீதியைப் பெற காத்திருக்கும் எளிய மக்கள், பலவேளைகளில் மனம் சோர்ந்து போகின்றனர்


நவ.05,2014. திருஅவையின் சட்ட வழிமுறைகள் வழியே நீதியைப் பெறுவதற்குக் காத்திருக்கும் எளிய மக்கள், பலவேளைகளில் மனம் சோர்ந்து போகும்படி, இவ்வழிமுறைகள் தாமதமாகின்றன என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் கூறினார்.
திருஅவைச் சட்டங்களும், வழிமுறைகளும் என்ற பாடங்களைப் பயில, உரோம் நகர் வந்திருக்கும் 300க்கும் அதிகமான அருள் பணியாளர்களை, இப்புதன் காலை, முத்திப்பேறு பெற்ற திருத்தந்தை ஆறாம் பால் அரங்கத்தில் சந்தித்தத் திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
தன்னைச் சந்திக்கவந்திருக்கும் மாணவர்களுக்கு தயாரித்து வைத்த எந்த உரையையும் வழங்காமல், தன் உள்ளத்தில் எழும் கருத்துக்களைப் பகிர்வதாகக் கூறியத் திருத்தந்தை, பொதுவாகவே திருஅவையின் சட்ட வழிமுறைகள் நீண்டகாலம் தொடர்வதால் எளிய மக்கள் மனம் தளர்ந்து போகின்றனர் என்பதை, தன் பணி வாழ்வில் நிகழ்ந்த எடுத்துக்காட்டுகளுடன் எடுத்துரைத்தார்.
உலக வழிமுறைகள், குறிப்பாக, வர்த்தக உலகின் வழிமுறைகளிலிருந்து மாறுபட்டு, நீதியையும், உண்மையையும் நிலைநிறுத்துவது, திருஅவைச் சட்ட வழிமுறைகளின் அடிப்படைப் பண்பாக அமையவேண்டும் என்பதையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.
நலமான மனசாட்சியுடன் இந்தக் கடினமானப் பணியில் எவ்விதம் ஈடுபடுவது என்பதை, அருள் பணியாளர்கள் கவனமாகக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற தன் ஆவலை வெளியிட்டு, திருத்தந்தை தன் உரையை நிறைவு செய்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.