"கிழக்குக் கிறிஸ்தவர்கள்" என்ற தலைப்பில் உரோம் நகரில் கண்காட்சி
நவ.05,2014. "கிழக்குக் கிறிஸ்தவர்கள்" என்ற தலைப்பில், மத்தியக் கிழக்குப் பகுதிகளில்
வாழும் கிறிஸ்தவர்களின் வரலாறு, இன்றைய நிலை ஆகியவற்றைச் சித்திரிக்கும் ஒரு கண்காட்சியை,
இச்செவ்வாயன்று உரோம் நகரில் துவக்கிவைத்த கீழைவழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால்
லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், மத்தியக் கிழக்குப் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களின்
உறுதி, நம்பிக்கை, அவர்கள் படும் வேதனைகள், எதிர்நோக்கும் சவால்கள் ஆகிய அனைத்தும் இந்தக்
கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன என்று கூறினார். "கிறிஸ்தவர்கள் அற்ற மத்தியக் கிழக்குப்
பகுதி என்ற அவநம்பிக்கை உணர்வுகளுக்கு நாம் உள்ளாகப் போவதில்லை" என்று திருத்தந்தை பிரான்சிஸ்
அவர்கள் கூறிய வார்த்தைகள், இந்தக் கண்காட்சியின் நுழைவில் வைக்கப்பட்டிருப்பதை கர்தினால்
சாந்த்ரி அவர்கள் பாராட்டினார். 1916ம் ஆண்டு முதல் ஏறத்தாழ ஒரு நூற்றாண்டளவாய் மத்தியக்
கிழக்குப் பகுதியில் எடுக்கப்பட்ட பல புகைப்படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெற்றுள்ளன. இப்பகுதிகளில்
பல ஆண்டுகள் பணியாற்றிவரும் தொமினிக்கன், மற்றும் பிரான்சிஸ்கன் துறவுச் சபையைச் சார்ந்தவர்கள்
பாதுகாத்து வைத்துள்ள பல அரிய படங்கள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுவதைக் குறித்தும்
கர்தினால் சாந்த்ரி அவர்கள் குறிப்பிட்டு, பாராட்டினார்.