நாடற்ற மக்களின் நிலையை பத்து ஆண்டுகளுக்குள் சரிசெய்வதற்கு ஐ.நா. திட்டம்
நவ.04,2014. உலகில் தங்களுக்கென்று ஒரு நாடு இல்லாமல் துன்புறும் மக்களின் நிலைமையை பத்து
ஆண்டுகளுக்குள் சரிசெய்வதற்கு, UNHCR என்ற ஐ.நா.வின் புலம்பெயர்ந்தோர் நிறுவனம் புதிய
முயற்சியில் இறங்கியுள்ளது. இன்று உலகில் குறைந்தது ஒரு கோடிப் பேர் எந்த நாட்டையும்
சேராமலும், கடவுச்சீட்டு இல்லாமலும் உள்ளனர் என்றுரைக்கும் UNHCR நிறுவனம், மருத்துவ
உதவி, கல்வி வாய்ப்பு, தேர்தலில் ஓட்டளிப்பது போன்ற அரசியல் உரிமைகள் ஆகியவை மறுக்கப்படும்
நிலைக்கு இது இட்டுச்செல்லும் என்றும் கூறியுள்ளது. மியான்மாரின் ரோஹின்யா சிறுபான்மையினம்
போன்ற இனக் குழுக்களுக்கு குடியுரிமையும், பிற உரிமைகளும் மறுக்கப்படுகின்றன என்றும்,
அகதிகள் முகாம்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு, தாங்கள் பிறக்கும் நாடுகளின் குடியுரிமை
கிடைப்பதில்லை என்றும் UNHCR நிறுவனம் மேலும் கூறியது. தற்போது 27 நாடுகளில் பெண்கள்
தங்களின் குடியுரிமையை தங்கள் பிள்ளைகளுக்கு வழங்க முடியாத நிலையில் உள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது.