சிரியாவின் மனிதாபிமான நெருக்கடி மிக மோசம், வத்திக்கான் அதிகாரி
நவ.04,2014. போரினால் பாதிக்கப்பட்டுள்ள சிரியாவில் காணப்படும் மனிதாபிமானச் சூழல், தான்
நினைத்ததைவிட மோசமாக உள்ளது என்று, அந்நாட்டுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள
வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார். கடந்த அக்டோபர் 28, 29 தேதிகளில் சிரியாவில்
சுற்றுப்பயணம் மேற்கொண்டு திரும்பியுள்ள, திருப்பீட Cor Unum பிறரன்பு அவையின் செயலர்
பேரருள்திரு Giampietro Dal Toso அவர்கள், பெய்ரூட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் இவ்வாறு
கூறினார். ஈராக்கிலுள்ள மனிதாபிமான நெருக்கடி, சிரியாவின் பிரச்சனையோடு தொடர்புடையது,
இவ்விரு நாடுகளின் பிரச்சனைகளை ஒரே பிரச்சனையாக நோக்க வேண்டும் என்றும், சிரியாவில் நடுத்தர
வர்க்கத்தினர் காணாமல்போயுள்ளனர், அந்நாட்டினர் அனைவரும் போரினால் பாதிக்கப்பட்டுள்ளனர்
என்றும் கூறினார் பேரருள்திரு Dal Toso. சிரியாவில் 2011ம் ஆண்டில் போர் தொடங்குவதற்கு
முன்னர் 2 கோடியே 20 இலட்சமாக இருந்த மக்கள் தொகையில் குறைந்தது ஒரு கோடிப்பேர் புலம்பெயர்ந்துள்ளனர்
என்றும் உரைத்த பேரருள்திரு Dal Toso அவர்கள், ஈராக் மற்றும் சிரியாவிலிருந்து செல்லும்
புலம்பெயர்ந்தோரை ஏற்பதற்கு நாடுகள் தயக்கம் காட்டுகின்றன என்றும் கூறினார். நாற்பது
இலட்சம் மக்களைக் கொண்ட லெபனோன் நாட்டு எல்லைகளில், மேலும் 15 இலட்சம் புலம்பெயர்ந்தோர்
வாழ்வதையும் பேரருள்திரு Dal Toso அவர்கள் சுட்டிக்காட்டினார்.