நவ.03,2014. இறைவனுக்கும் அவர் மக்களுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகளின் கனியே இறைவெளிப்பாடுகள்
என, இத்திங்களன்று புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை
பிரான்சிஸ் அவர்கள் தன் மறையுரையில் கூறினார். கடந்த 12 மாதங்களில் திருஅவையில் உயிரிழந்த
கர்தினால்கள், பேராயர்கள், ஆயர்கள் ஆகியோரின் ஆன்ம இளைப்பாற்றிக்காக இத்திங்கள் காலை
உரோம் நேரம் 11.30 மணிக்கு தூய பேதுரு பசிலிக்காப் பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றி
மறையுரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவெளிப்பாடு அனைத்திற்கும் காரணமான
இறைவனுக்கும் மனிதருக்கும் இடையேயான உரையாடலுடன் உயிர்ப்பும் தொடர்பு கொண்டுள்ளது என்றார். இறைவனுக்கும்
அவர் மக்களுக்கும் இடையேயான உரையாடல் மனிதகுல வரலாற்றில் எப்போதும் தொடர்ந்து வந்துகொண்டேயிருக்கும்
ஒன்று எனவும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. இறைவனுடனான இறைமக்களின் பயணம் இயேசுவின்
உயிர்ப்பில் தன் நிறைவையும் உண்மை வெளிப்பாட்டையும் கண்டது, அதனால்தான் இயேசுவும், 'நானே
வாழ்வும் உயிர்ப்பும்' என்றுரைத்தார் என தன் மறையுரையில் மேலும் கூறினார் திருத்தந்தை
பிரான்சிஸ்.