பழங்குடி மக்களின் தோழர்களாகப் பணியாற்ற மியான்மார் இயேசு சபையினர் தீர்மானம்
அக்.31,2014. மியான்மாரில் பணியாற்றும் இயேசு சபையினர் பழங்குடியின மக்களின் தோழர்களாக
இருந்து அவர்களுக்கு மேய்ப்புப்பணிகளைச் செய்வதற்குத் தீர்மானித்திருப்பதாக பீதெஸ் செய்தி
நிறுவனம் கூறியது. மியான்மாரின் Phekon மறைமாவட்டத்தில் அண்மையில் நடந்த ஆசிய-பசிபிக்
பகுதி இயேசு சபையினரின் கூட்டத்தில் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்ட மியான்மாரில்
பணியாற்றும் இயேசு சபையினர் இவ்வாறு தீர்மானித்துள்ளனர். மியான்மாரில் தற்போது நகர்ப்புறமயமாக்கல்
வேகமாக வளர்ந்து வந்தாலும், பழங்குடியின மக்கள் இயற்கையோடும், படைப்புக்களோடும், மனித
வாழ்வோடும், பிற மனிதர்களோடும் கொண்டிருக்கும் நல்லிணக்கம், அம்மக்களின் வாழ்வே வாழ்வதற்குச்
சிறந்ததாக உள்ளது என இக்கூட்டத்தில் கூறப்பட்டது. இந்த மக்களின் மரபுவழிக் கலாச்சாரங்களின்
வளங்களைப் போற்றி அவர்களுக்கு கிறிஸ்துவின் நற்செய்தியைப் பரப்பி அதற்குச் சாட்சிகளாக
வாழவேண்டுமென்பதே இயேசு சபையினரின் மேய்ப்புப்பணியின் நோக்கம் எனவும் கூறப்பட்டது. மியான்மாரில்
135 பழங்குடியினச் சமூகங்கள் உள்ளன. இச்சமூகத்தினர், தேசிய மக்கள் தொகையில் மூன்றில்
ஒரு பாகமாக உள்ளனர்.