2014-10-31 15:19:23

சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துமாறு நாடுகளுக்கு ஆயர்கள் வேண்டுகோள்


அக்.31,2014. உலகம் சிரியா நாட்டுக்கு உதவிசெய்ய விரும்பினால், அந்நாட்டுடன் நடத்தும் ஆயுத வணிகத்தை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர் சிரியா கத்தோலிக்க ஆயர்கள்.
தமாஸ்கு நகரில் இவ்வாரத்தில் கூட்டம் நடத்தி அறிக்கை வெளியிட்டுள்ள ஆயர்கள், உலக நாடுகள் சிரியாவுக்கு ஆயுதங்களை அனுப்புவதை நிறுத்துவது, சிரியாவில் கிறிஸ்தவர்கள் தொடர்ந்து தங்குவதற்கு உதவியாக இருக்குமென்றும் கூறியுள்ளனர்.
சிரியாவில் மறைப்பணியாற்றும் ஆறு கத்தோலிக்க வழிபாட்டு முறையின் ஆயர்கள் அனைவரும் கலந்துகொண்ட இக்கூட்டத்தில் அந்நாட்டின் தற்போதைய பிரச்சனைகள் குறித்து அதிகம் பேசப்பட்டதாக, அலெப்போ அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Georges Abou Khazen அவர்கள் கூறினார்.
தாங்கள் இருளில் வாழ்வதாகவும், இச்சூழலைவிட்டுச் செல்லும்வழி தெரியவில்லை எனவும், கிறிஸ்து ஒருவரே தங்கள் இதயங்களுக்கு நம்பிக்கையை அளிக்க முடியும் எனவும் பீதெஸ் செய்தி நிறுவனத்திடம் கூறியுள்ளார் ஆயர் Khazen.

ஆதாரம் : Fides







All the contents on this site are copyrighted ©.