மரண தண்டனையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள் தவறானவை - பிலிப்பின்ஸ் ஆயர்கள்
எதிர்ப்பு
அக்.29,2014. பிலிப்பின்ஸ் நாட்டில் மரண தண்டனையை மீண்டும் புதுப்பிக்கும் முயற்சிகள்
தவறானவை என்று அந்நாட்டு ஆயர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சிறை கைதிகளின் மேய்ப்புப்பணி
பராமரிப்பு வாரத்தை, பிலிப்பின்ஸ் தலத்திருஅவை அண்மையில் கொண்டாடியதையொட்டி ஆயர்கள் வெளியிட்ட
ஓர் அறிக்கையில், எக்காரணம் கொண்டும் மனித உயிர்களைப் பறிப்பது ஏற்புடையதன்று என்று கூறியுள்ளனர். மனிதர்களை
சிறையில் அடைத்து, கொடுமைப்படுத்தி அவர்கள் உயிரைப் பறிப்பதன் வழியாக, மனித உயிர்கள்
மலிவானவை என்ற கருத்தை குழந்தைகள், மற்றும் இளையோர் மனதில் ஆழப் பதிக்கிறோம் என்று ஆயர்கள்
கவலை வெளியிட்டுள்ளனர். சிறை கைதிகளின் மேய்ப்புப்பணி பராமரிப்பு வாரத்தை கொண்டாடும்
வேளையில், கைதிகளும் நமது அயலவர்கள் என்ற அக்கறையுடன், அவர்களது வாழ்வை சீரமைக்கும் முயற்சிகளை
மேற்கொள்ளவேண்டும் என்று பிலிப்பின்ஸ் ஆயர் பேரவையின் சார்பில் பேசிய, ஆயர் Leopoldo
Tumulak அவர்கள் கூறினார்.