2014-10-29 15:39:11

புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே இறுதி முறை என்பது வதந்தி


அக்.29,2014. புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படுவது இதுவே இறுதி முறை என்று ஊடகங்கள் சிலவற்றில் வெளியாகும் செய்திகள் ஆதாரமற்றவை என்று கோவா பேராயரின் செயலர் அருள்பணி Joaquim Loiola Pereira அவர்கள் கூறினார்.
இவ்வாண்டு நவம்பர் மாதம் முதல் அடுத்த ஆண்டு சனவரி முடிய, கோவாவில் பாதுக்காக்கப்பட்டு வரும் புனித பிரான்சிஸ் சேவியர் அவர்களின் உடல், பத்தாண்டுகளுக்குப் பின்னர் மக்கள் பார்வைக்குத் திறந்து வைக்கப்பட உள்ளது.
இவ்வேளையில், இத்தகைய முயற்சி இதுவே இறுதி முறை என்று ஒரு சில ஊடகங்கள் வதந்திகளைக் கிளப்பி வருவது இது முதல் முறையல்ல, கடந்த நான்கு முறை இந்த முயற்சி மேற்கொண்ட போதும் இதுபோன்ற வதந்திகள் நிலவின என்றும் அருள்பணி Pereira சுட்டிக்காட்டினார்.
இதுபோன்ற வதந்திகளைப் பரப்புவது, பக்தர்களின் கூட்டத்தை அதிகரிப்பதற்கு, போக்குவரத்து மற்றும் உல்லாசப் பயணங்களை ஏற்பாடு செய்யும் ஒரு சில நிறுவனங்கள் மேற்கொள்ளும் முயற்சி என்று அம்மறைமாவட்டத்தின் மற்றொரு அருள் பணியாளர் கூறியுள்ளார் என்று ஊடகங்கள் கூறுகின்றன.

ஆதாரம் : TOI/UCAN








All the contents on this site are copyrighted ©.