சிரியாவில் கிறிஸ்தவர்கள் பள்ளிகளுக்குப் பதிலாக கல்லறைகளைக் கட்டி வருகின்றனர்
அக்.28,2014. சிரியாவில் நான்காவது ஆண்டாக சண்டை தொடர்ந்துவரும்வேளை, அந்நாட்டின் தலைநகரில்
தங்கியிருக்கும் கிறிஸ்தவர்கள் வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர் என்று தமாஸ்கஸ்
மாரனைட் வழிபாட்டுமுறை பேராயர் சமீர் நாசர் அவர்கள் கூறினார். 2013ம் ஆண்டைவிட, 2012ம்
ஆண்டில் அதிக அளவில் திருமுழுக்கு மற்றும் திருமண அருளடையாளங்கள் நிறைவேற்றப்பட்டன, அதேசமயம்
அடக்கச் சடங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்று, Aid to the Church in Need
பிறரன்பு நிறுவனத்திடம் கூறினார் பேராயர் நாசர். பாலர் பள்ளிகளையும் பிற பள்ளிகளையும்
கட்டுவதற்கு, முன்பு திட்டங்கள் இருந்தன, ஆனால் தற்போது கிறிஸ்தவக் கல்லறைத் தோட்டத்தை
விரிவுபடுத்துவதற்குத் திட்டங்களை அமைத்து வருவதாக மேலும் கூறினார் பேராயர் நாசர். வாகனக்
குண்டு வெடிப்பு அல்லது மறைந்திருந்து குறிபார்த்துச் சுட்டு வீழ்த்தப்படல் என, தமாஸ்கஸ்
நகரில் ஒருவர் இறப்பதற்கு பல வழிகள் உள்ளன என்றும் விளக்கிய பேராயர், சிரியாவின் உள்நாட்டுப்
போரிலிருந்து ஐஎஸ் இஸ்லாமிய நாட்டின்மீது அனைத்துலக கவனம் திரும்பியிருப்பதால் மக்கள்
கடினமான சூழல்களை எதிர்நோக்குகின்றனர் என்றும் கூறினார். இக்கிறிஸ்தவர்களுக்கு மாரனைட்
தலத்திருஅவை உதவி வருகின்றபோதிலும், இம்மக்களின் வாழ்வு மிகவும் துன்பநிலையில் உள்ளது
என்றும் பேராயர் கூறினார்.